நல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்.. மண்ணுக்குள் போன நாள்.. இன்று!
சந்தன கடத்தல் வீரப்பன் 15-ம் ஆண்டு நினைவு நாள் நிறைவு பெறுகிறது
Recommended Video
சென்னை: சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்று.. நல்லதும், கெட்டதும் நிறைந்த குணங்களுடன் நடமாடிய வீரப்பனை நாம் மறந்துவிடவும் முடியாது.
சந்தன கடத்தல்தான் முக்கிய தொழில்.. இதற்காக வீரப்பனை கைது செய்ய, தனது கடமையை செய்த பல உயர் அதிகாரிகளையும் அவர்களுக்கு தகவல் சொன்ன பல இளைஞர்களையும் வீரப்பன் படுகோரமாய் கொலை செய்தார். அரிவாளால் கழுத்தை அறுத்து, தலையை தனியாக கையில் எடுத்துக் கொண்டு புதர்களிலும், செடிகளிலும் வீசியெறிந்த காட்டு மிராண்டித்தனமான சம்பவங்களை நாடு கண்டு அலறியது.
நாட்டிற்கும் காட்டிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியவர் வீரப்பன்.. பல உயர் அதிகாரிகளின் தலையை வெட்டி படுகொலை செய்தவர்.. நடிகர் ராஜ்குமார் போன்ற பிரமுகர்களை கடத்தி பல்லாயிரம் தமிழர்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைத்தவர்.. கடமையை செய்த நேர்மையான பல போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.. அவர்களது மனைவி மக்களின் கதறல் இன்னும் அடங்கவில்லை..
மிரட்டல்
அதே சமயம், எத்தனையோ நபர்களை கணக்கில்லாமல் வெட்டி வீழ்த்திய வீரப்பனிடம் ஒருசில நல்ல குணங்களும் இருந்தன. அதில் ஒன்று உதவும் மனப்பான்மை. இந்த மனப்பான்மை தான் வீரப்பனை கிராம மக்கள் காட்டிக் கொடுக்காமல் பல காலம் நடமாட உதவியது. மாநில அரசுகளை மிரட்டியே தன் காரியத்தை சாதித்து கொள்ளும் வீரப்பன், 108 நாட்கள் ராஜ்குமாரை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்.
கோபம்
அந்த 108 நாட்களிலும் வீரப்பன் தன் கோபத்தை ராஜ்குமாரிடம் காட்டியதே இல்லை. எத்தனையோ பேரை அசால்ட்டாக தலையை வெட்டி சாய்த்த வீரப்பனுக்கு ராஜ்குமார் மீது எந்த கோபமும் கடைசி வரை வரவில்லை. அதை விட, அதிக மரியாதையுடன் நடத்தினார். வீரப்பனை பொறுத்தவரை ராஜ்குமார் ஒரு கருவி. அவ்வளவுதான். நேரடியாகவோ, தனிப்பட்ட முறையிலோ எந்த கோபமும் ராஜ்குமார் மீது வீரப்பனுக்கு வந்ததில்லை.
உடும்பு தைலம்
வயது முதிர்ந்த நிலையிலும் மூட்டுவலியாலும் அவதிப்பட்டு வந்த ராஜ்குமாரை கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ராஜ்குமாரை காட்டுக்குள்ளேயே இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மூட்டுவலி பாதித்த ராஜ்குமாருக்கு, அந்த காட்டிலேயே உடும்பு தைலத்தை தேடிப்பிடித்து கொண்டு வந்து தானே தடவி விட்டிருக்கிறார். விடுவிக்கும்போதுகூட வேட்டி, சட்டைகளைப் பரிசாகத் தந்து வீரப்பன் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த விவரங்களை எல்லாம் விடுதலையானபோது ராஜ்குமாரே பத்திரிகையாளர்களிடம் சொல்லி மகிழ்ந்தார்.
தேசதுரோகி
ஆயிரம் இருந்தாலும் வீரப்பன் ஒரு தேசதுரோகியே. அதற்காக, வீரப்பன் காட்டில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, எல்லாத்தையும் ஒற்றை ஆளாகவே, அவர் தோளிலே சுமந்துவந்து, அவராகவே அதை மார்க்கட்டிலே விற்று, அப்பணத்தை தன்னுடைய வங்கியில் போட்டிருக்க முடியாது. அது ஒரு சங்கிலி தொடர். அதற்கென்று ஒரு பலமான காரணம் உண்டு - ஆழமான அடிப்படை உண்டு.
பிந்தரன்வாலே
பின்லேடன் முதல் பிந்தரன்வாலே வரை எல்லா தீவிரவாதிகளையும் எல்லா பயங்கரவாதிகளையும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே உருவாக்குகிறார்கள். தங்களது தேவைகள் பூர்த்தியடைந்த பிறகோ, அல்லது தம்மால் ஊட்டி வளர்க்கப்பட்ட பயங்கரவாதிகள் தங்களுக்கு சவாலாக திரும்புகிறபோதோ, அவர்களை அதே அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அழித்துவிட முனைகிறார்கள் என்பதுதான் வரலாறு.
பழி
பிள்ளைப் பூச்சியாய் இருந்தவனை தம் கொடுக்குகளால் கொட்டி கொட்டி குளவியாக்கியது நமது அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமேதான். அண்ணாந்து பார்க்கும் அளவு வீரப்பன் விஸ்வரூபம் எடுத்ததும் அவர்களாலேதான். பழியை வீரப்பன் ஏற்றுக்கொண்டான், பலன்களை இவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அவ்வளவுதான். சிம்பிள்!
பாடம்
வீரப்பன் ஒன்றும் தியாகி இல்லை. கோடி கோடியாய் பூமியில் புதைத்து வைத்தாலும், மனைவி மக்களோடு கொஞ்சநேரம்கூட நிம்மதியாய் சேர்ந்து வாழ முடியாமல் போனதும், யாருக்கும் சிறிதும் வருத்தமில்லாத, அனைவராலும் மகிழ்ச்சியோடு வரவேற்கக்கூடிய வகையில் கோரமான முறையில் வீரப்பன் தனது மரணத்தை தழுவ நேர்ந்ததும், தவறான பாதையில் பயணிக்க விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பாடத்தைதான் கற்பித்துவிட்டு போயிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.