மண் காக்கும் வீரத் தமிழர் பேரமைப்பு- சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி புதிய இயக்கம்
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு என்ற பெயரை வைத்துள்ளார்.
சேலம்: வீரப்பனின் 66வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாள் விழாவில் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார் அவரது மனைவி முத்துலட்சுமி.
வீரப்பன் 18 ஜனவரி 1952 ம் ஆண்டு கோபிநத்தம் என்னும் கிராமத்தில் வன்னியர் குலத்தில் பிறந்தார். சந்தனமரம் கடத்தல் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை ஆரம்ப நாட்களில் வீரப்பன் செய்து வந்தார்.
வீரப்பன் மீது சந்தன மரங்களை வெட்டியது, யானைகளை வெட்டியது. ஆள் கடத்தல் கொலை என பல குற்றச்சாட்டுகள் உள்ளன. கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநில காவல்துறைக்கும் சிம்மசோப்பனமாக இருந்தார்.
சந்தன வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் முக்கிய பிரமுகர்களைக் கடத்தி வைத்து, அரசிடம் பணம் பெறுவது, அரசு பணியவில்லை என்றால் கடத்தப்பட்ட நபரைக் கொலை செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கொலை செய்த பின்னர், சந்தன வீரப்பனைப் பிடிக்க இரு மாநில கூட்டு அதிரடிப் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் குழுவினரை அப்போதைய தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையின் தலைவர் கே.விஜயகுமார் தலைமையில் அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
வீரப்பன் பிறந்தது ஜனவரி 18,1952 அவர் சுட்டுக்கொல்லப்பட்டது அக்டோபர் 18, 2004. தமிழகம், கர்நாடகா எல்லையோர மாவட்டங்களில் இன்றைக்கும் வீரப்பனை கதாநாயகனாக பாவித்து போஸ்டர் ஒட்டி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.
சேலத்தில் நடைபெற்ற வீரப்பனின் 66வது பிறந்தநாள் விழாவில் வீரப்பன் மனைவி முத்து லட்சுமி புதிய இயக்கத்தை தொடங்கினார். மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு என்ற புதிய இயக்கத்தை வீரப்பன் மனைவி முத்து லட்சுமி தொடங்கியுள்ளார்.
இயக்கத்தை தொடங்கி வைத்து பேசிய முத்துலட்சுமி, வீரப்பன் இருந்த வரை தமிழரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டது. வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் கர்நாடகா மேகதாது அணையை கட்ட முடியாது என்றும் கூறினார்.