கோத்தகிரியில் இன்று 2-வது நாள் காய்கறி கண்காட்சி: பார்வையாளர்கள் பரவசம்!
2-வது நாள் காய்கறி கண்காட்சியினை ஏராளமானோர் கண்டுகளிக்கின்றனர்.
Recommended Video
கோத்தகிரி: கோத்தகிரியில் நடைபெற்றுவரும் இரண்டாவது நாள் காய்கறி கண்காட்சி மற்றும் கோடைவிழாவில் இன்று ஏராளமானோர் பங்கேற்று கண்டுகளித்து வருகின்றனர்.
கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி கடந்த 2008-ம் ஆண்டு முதல் நீலகிரி தோட்டக்கலை துறையால் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 10-வது காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சுற்றுலா துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும். மத்திய மாநில அரசுகளிடம் நிதி பெற்று சுற்றுலா ஸ்தலங்கள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் உதகையின் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் வரைவில் கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
காய்கறி கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை துறை மற்றும் காய்கறி உற்பத்தி தொடர்பான விளக்க அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் காய்கறி மற்றும் பழங்களை கொண்டு மெகா நந்தி அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர காய்கறிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் முதன் முறையாக இதில் காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டன.
இன்றைய 2-வது நாள் காய்கறி கண்காட்சியை ஏராளமானோர் கண்டு களித்து செல்வதுடன், காய்கறி அரங்கங்கள் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாக எடுத்து மகிழ்கின்றனர். இந்த காய்கறி கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பரிசும் சுழற்கோப்பையும் வழங்கப்படவுள்ளன.