பொங்கல் பண்டிகை- நெல்லையில் குவியும் காய்கறிகள்
நெல்லை: பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் நெல்லை மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டில் இருந்து நெல்லை மாவட்டத்தின் உள்பகுதிகளுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல கடைகளுக்கும் காய்கறிகள் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.
தலை பொங்கலுக்காக மொத்தமா காய்கறிகள் வாங்கி செல்லும் வாடிக்கயாளர்கள் பலரும் நயினார்குளம் மார்க்கெட்டில் தான் வாங்கி செல்கின்றனர். தக்காளி, கத்தரிக்காய், வெண்டை, சிறுகிழங்கு, முட்டைகோஸ், உள்ளிட்ட காய்கறி விலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை.
ஆனால் வெங்காயம் உள்பட சில காய்கறிகளின் விலை மட்டும் விலையேற்றத்தை சந்தித்துள்ளன. சிறுகிழங்கு மட்டும் ரூ.30 வரை விற்கப்படுகிறது.
நயினார் குளம் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை நிலவரம் பின் வருமாறு:
கத்தரிக்காய் ரூ.20, சம்பா ரகம் ரூ.10, வழுதலங்காய் ரூ.8, சேனை ரூ.14, புடலங்காய் ரூ.8, கருணை ரூ.34, பீட்ரூட் ரூ.24, கேரட் ரூ.20, பீன்ஸ் ரூ.20, பாகற்காய் ரூ.15, அவரை ரூ.15, தடியங்காய் ரூ.5, பூசணிக்காய் ரூ.6, சீனி அவரை ரூ.8 என உள்ளது.
பொங்கல் நெருங்கும் சமயத்தில் மேலும் காய்கறிகள் வரத்து அதிகமாக இருக்கும். அப்போது இவற்றின் விலையில் மேலும் சரிவு இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேவை அதிகமாக இருப்பின் வெளி மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். காய்கறிகளின் விலை குறையும் வாய்ப்புள்ளதால் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.