காய்கறி என்றாலே அலறும் பொதுமக்கள்- தாறுமாறாய் உயர்ந்தது கத்தரி விலை!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.குறிப்பாக கத்தரிக்காய் விலை சதம் அடித்துள்ளதால் பலர் கத்தரிக்காயை கண்டாலே அலறி அடித்து ஓடுகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது. இதனால் ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இது போல் காய்கறி அதிகம் விளையும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளிலும் கன மழை பெய்ததால் காய்கறி வரத்து குறைந்து போனது. நெல்லை டவுண் நயினார்குளம் மார்க்கெட்டுக்கு பொள்ளாச்சி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் டன் கணக்கில் லாரிகளில் காய்கறிகள் வந்து இறங்கும்.
பின்னர் அவை இங்கிருந்து நாகர்கோவில், கேரள போன்ற பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும். காய்கறி உற்பத்தி குறைந்து வருவதை அடுத்து அவற்றின் விலை கடுமையாக உயர தொடங்கியுள்ளது.
கத்தரிக்காய் கிலோ ரூ.80, அவரைக்காய் கிலோ ரூ.40, மாங்காய் கிலோ ரூ.40, உருளை கிலோ ரூ.40, பீன்ஸ் கிலோ ரூ.60, கருணை கிழங்கு கிலோ ரூ.60, கேரட் கிலோ ரூ.50, பீட்ரூட் கிலோ ரூ.30, பாகற்காய் கிலோ ரூ.35, வெண்டை கிலோ ரூ.35, பல்லாரி கிலோ ரூ.36, வெங்காயம் கிலோ ரூ.40, சவ்சவ் கிலோ ரூ.40, தடியங்காய் கிலோ ரூ.15, பூசணிக்காய் கிலோ ரூ.15, புடலை கிலோ ரூ.40 என விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
காய்கறி விலை உயர்வால் நடுந்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான குடும்பங்களில் காய்கறியின் தேவையை பாதியாக குறைந்து விட்டனர்.