காய்கறி வரத்து அதிகரிப்பு... கிலோ 10 ரூபாய்தான்... உற்சாக மூடில் இல்லத்தரசிகள்
வரத்து அதிகரிப்பு காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் தக்காளி கிலோ 10 ரூபாய், சின்ன வெங்காயம் கிலோ 35 ரூபாய் என காய்கறிகள் விலை கடுமையாக சரிந்துள்ளது.
தமிழகம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடந்தாண்டு நல்ல மழை பெய்தது. இதனால் காய்கறிகள் விளைச்சல் சிறப்பாக உள்ளது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி பல்லாரி வெங்காயம் - ரூ.42க்கு விற்பனையாகிறது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ 13 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ரூ.35க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் கடந்த 5 மாதமாக சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்ததால் 30 சதவீதம் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக சின்னவெங்காயம் விலை உயர்ந்து கிலோ ரூ.200 வரை சென்றது. உரிக்காமலேயே கண்ணீரை வரவழைத்தது சின்ன வெங்காயம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் வழக்கத்தை விட மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்து வருகிறது.
கடந்த டிசம்பரில் கிலோ ரூ.70 என விற்பனை செய்யப்பட்டது. தற்போது மொத்த விலையில் ரூ.40 என விற்கப்படுகிறது. எதிர்வரும் வாரத்தில் சின்னவெங்காயம் வரத்து அதிகரிக்கவுள்ளதால், இன்னும் விலை சரிய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்து வருகிறது. முகூர்த்த நாட்கள் தொடங்கியுள்ளதால், அதிக அளவில் காய்கறிகள் விற்பனையாகின்றன. இருப்பினும் விலை வீழ்ச்சியால் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை.
காய்கறிகள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவடைந்து வந்தது. தற்பொழுது நுகர்வு சற்று குறைந்துள்ளதால் விலை மேலும் சரிந்துள்ளது. பெரும்பாலான காய்கறிகள் விலை கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.5 வரை குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.