வெங்காயம், கத்ரிக்காய், தக்காளி.. விலையெல்லாம் ரொம்ப சீப்புங்க.. நல்லா சமைச்சுச் சாப்பிடுங்க!
சென்னை: 100 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி வாங்கிய காலம் மலையேறி விட்டது 10 ரூபாய்க்கு 2 கிலோ தக்காளி, 10 ருபாய்க்கு ஒரு கிலோ காய்கறி என சந்தைகளில் விலை மலிவாக காய்கறிகள் கிடைப்பதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. நேற்று காய்கறிகள் விலை மேலும் குறைந்து காணப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலை உச்சத்தில் காணப்பட்ட தக்காளி, முருங்கைக்காய், பீன்ஸ், அவரைக்காய் ஆகியவற்றின் விலை தற்போது வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது.
வரத்து அதிகரிப்பால், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி தக்காளி, முட்டைகோஸ் கிலோ ரூ.6க் கும், பீட்ரூட், வெண்டைக்காய் தலா ரூ.8-க்கும், கத்தரிக்காய், புடலங்காய் தலா ரூ.10க்கும் விற்கப்படுகிறது.
காய்கறி விலை குறைந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தங்களுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை என மொத்த, சில்லறை வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோது, ''வெளி மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியில் குறைந்த அளவே லாபம் வைத்து விற்க முடிகிறது. கூடைகளை ஏற்றி, இறக்கும் தொழிலாளிக்குகூட கூலி கொடுக்க முடியாத நிலை உள்ளது'' என்றார்.
ஜாம்பஜார் மார்க்கெட்டில் சில்லறை விலையில் காய்கறி விற்கும் முகமது அலியிடம் கேட்டபோது, கடந்த மாதங்களில் பல காய்கறிகள் கிலோ ரூ.30 முதல் ரூ.80 வரை விற்றது. இப்போது எல்லா காய்கறிகளும் ரூ.10 முதல் ரூ.20 அளவிலேயே விற்கப்படுகிறது. அதனால் போதிய வருவாய் கிடைக்கவில்லை என்பது வியாபாரிகளின் கவலையாக உள்ளது. சில வாரங்களுக்கு வியாபாரத்தையே நிறுத்திவிடப் போகிறேன் என்று கூறுகிறார் ஒரு வியாபாரி.
தீபாவளி வரைக்கும் இதே நிலை தான் நீடிக்கும் என்று கூறினாலும் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானவர்கள் இறைச்சியை தவிர்த்துவிட்டு காய்கறிக்கு மாறிவிடுவார்கள். அப்போது காய்கறிகள் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும் காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது நாள் ஒன்றுக்கு 230 லாரிகளில் காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
பழநி, கணக்கன்பட்டி, கோம்பை பட்டி, கரடிகூட்டம், தாமரைக்குளம், கரிக்காரன்புதுார் உட்பட பல்வேறு பகுதிகளில், சொட்டுநீர்ப்பாசனம், கிணற்றுப் பாசனம் மூலம் தக்காளி, கத்திரிக்காய், முட்டைகோஸ் சாகுபடி செய்துள்ளனர். மழை இல்லாததால் நெல்சாகுபடியை தவிர்த்து விவசாயிகள் காய்கறி சாகுபடியை அதிகரித்துள்ளனர். இதனால் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து விலையும் கனிசமாக குறைந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையிலும் காய்கறிகள் விலை குறைவாகவே காணப்படுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கும் நேரத்தில் காய்கறிகள் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் காய்கறி வியாபாரிகள்.