கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை 2 மடங்கு உயர்வு
சென்னை: வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
கோடை வெப்பத்தின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து வருகிறது. இதனால், அவற்றில் விலை இருமடங்காக உயர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவே விவசாய சாகுபடிகள் நடந்தன. இதனால், கோடை காலத்தில் கோயம்பேடு மார்க் கெட்டுக்கு காய்கறி வரத்து குறைவாகவே இருக்கிறது. விலையும் உயர்ந்து வருகிறது என்கின்றனர் கோயம்பேடு மார்க்கெட் அனைத்து காய்கறி மொத்த வணிக வளாக ஆலோசகர் சவுந்தரராஜன்.
கடந்த வாரம் ஒரு கிலோ பீன்ஸ் மொத்த விலையில் ரூ.30-க்கும், சில்லறை விலையில் ரூ.35-க்கும் விற்கப்பட்டது. புதன்கிழமை இது இரு மடங்காக உயர்ந்தது. மொத்த விலையில் ரூ.60-க்கும், சில்லறை விலையில் ரூ.70-க்கும் விற்கப்படுகிறது.
அதேபோல சில்லறை விலையில் ரூ.30-க்கு விற்கப்பட்டு வந்த அவரைக்காய், தற்போது ரூ.60க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமாக கோடை காலத்தில் விலை உயர்வை சந்திக்கும் சாம்பார் வெங்காயம், தற்போது கிலோ ரூ.30-க்கு மட்டுமே விற்கப்படுகிறது.
வட மாநிலங்களில் இருந்து சாம்பார் வெங்காயம் வருவது அதிகரித்துள்ளதால் அவற்றில் விலை உயரவில்லை என்கின்றனர் காய்கறி விற்பனையாளர்கள்.