அண்டை மாநில மழையால் விளைச்சல் பாதிப்பு.. வரத்து குறைந்ததால் கோயம்பேட்டில் காய்கறி விலை கிடுகிடு!
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை காரணமாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விலையிலேயே காய்கறிகளின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் மொத்த விலையிலேயே இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்கு காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அதிக அளவிலான காய்கறிகள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தே கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் கோயம்பேடு சந்தைக்கு வழக்கத்தை விட குறைவான அளவே காய்கறிகளின் வரத்து இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதற்கும் ஏகப்பட்ட கிராக்கி இருப்பதால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாகக் கூறுகின்றனர்.
வரத்து குறைந்தது
மொத்த விலையிலேயே காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ. 40க்கு விற்கப்பட்ட ஒருகிலோ கேரட் இன்றைய சந்தை விலையில் ரூ. 80க்கு விற்கப்படுகிறது. இதே போன்று பீட்ரூட் ரூ. 30ல் இருந்து ரூ. 60 ஆகவும்,முட்டைகோஸ் ரூ. 20ல் இருந்து ரூ. 40 ஆகவும் அதிகரித்துள்ளது.
ரூ. 50 வரை உயர்வு
அவரைக்காய் ஒரு கிலோவிற்கு ரூ. 30 அதிகரித்து ரூ. 80க்கு விற்கப்படுகிறது. பீன்ஸ் கிலோவிற்கு ரூ. 40 அதிகரித்து ரூ. 100க்கும், முருங்கைக்காய் கிலோவிற்கு ரூ. 50 அதிகரித்து ரூ. 150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சின்ன வெங்காயம் விலை மீண்டும் உச்சம்
சின்ன வெங்காயத்தின் விலையம் ரூ. 120ஐ மீண்டும் தொட்டுவிட்டது. பல்லாரி என்று சொல்லப்படும் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 40க்கு விற்கப்படுகிறது. தக்காளியின் விலையும் அரை சதத்தை தொட்டுவிட்டது.
சில்லரை விலைக்கடையின் ஜாஸ்தி
கத்திரிக்காய் விலை ரூ.10 அதிகரித்து ரூ. 45க்கும், வெண்டைக்காய் விலை ரூ. 15 அதிகரித்து ரூ. 45க்கும் விற்பனையாகிறது. மொத்த விலையிலேயே இருமடங்கு விலை உயர்வு என்றால் சில்லரை விலைக் கடையில் வாங்கும் போது இது இன்னும் அதிகரிக்கிறது என்று இல்லத்தரசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விலை இப்போதைக்கு குறையாது
எனினும் இப்போது தான் காய்கறிகள் விதைக்கப்பட்டுள்ளன என்பதால் அவை அறுவடைக்கு வர ஒரு மாத காலமாகிவிடும். எனவே ஒரு மாத காலத்திற்கு காய்கறிகளின் விலை இப்படியேத் தான் இருக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.