கோயம்பேட்டில் குவியும் காய்கறிகள்....குறைந்தது விலை!
சென்னை: சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் தக்காளி, வெங்காயம் உட்பட அனைத்து காய்கறிகளின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த வாரத்தை காட்டிலும் வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலைநன்றாக குறைந்துள்ளது.
இதனால், ஏழை எளிய மக்கள் உதடுகளில் புன்னகை தவழ ஆரம்பித்துள்ளது.
சிரிக்க வைக்கும் வெங்காயம்:
கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூபாய் 40 க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் நேற்று ஒரு கிலோ ரூபாய் 20 முதல் ரூபாய் 25 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆஹாஹா தக்காளி:
தக்காளி கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூபாய் 30 முதல் ரூபாய் 35 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூபாய் 15 முதல் ரூபாய் 20 வரை விற்பனையானது.
பட்டையைக் கிளப்பும் பீன்ஸ்:
கடந்த வாரத்தில் பீன்ஸ் ஒரு கிலோ ரூபாய் 50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நேற்று ஒரு கிலோ ரூபாய் 30 க்கு விற்பனையானது.
அசத்தும் அவரைக்காய்:
கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூபாய் 50க்கு விற்பனையான அவரைக்காய் நேற்று ஒரு கிலோ ரூபாய் 40க்கும் விற்பனை செய்யப்பட்டது.
விலை குறையும் காய்கள்:
இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்திரராஜன், "கடந்த சில வாரங்களாகவே காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு விலை உச்சத்தில் காணப்பட்டு வந்த தக்காளி தற்போது விலை குறைந்து காணப்பட்டுள்ளது.
வரத்து அதிகரிப்பு:
ஒரு நாளைக்கு 40 லாரிகளில் வந்துகொண்டிருந்த தக்காளி ஆந்திரா கர்நாடகா ஆகிய பகுதிகளில் விளைச்சல் அதிகரித்துள்ளதால் இப்போது நாளொன்றுக்கு 60 லாரிகளில் வந்து கொண்டு இருக்கிறது.
வீழ்ச்சிக்கு காரணம்:
ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தற்போது வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரத்தில் விலை உயர்ந்து காணப்பட்ட வெங்காயம் தற்போது குறைந்துள்ளது.
எல்லா காய் விலையும் குறைவு:
இதே போல் மற்ற காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது.
ஆனால் மிரள வைக்கும்உருளை:
ஆனால் உருளைக்கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை மட்டும் சற்று உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.