கடும் வறட்சி எதிரோலி.. காய்கறி விலை கிடுகிடு உயர்வு.. குடும்பத் தலைவிகள் கவலை
கடும் வறட்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி: கடும் வறட்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. இதன்காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் நெற்பயிர்கள் கருகி உள்ளது. இந்த சூழ்நிலையில் தண்ணீர் இல்லாமல் காய்கறி உற்பத்தியும் வெகுவாக குறைந்துவிட்டது. தமிழகம் முழுவதுமே வறட்சி நிலவுவதால் வெளி மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது.
குமரி மாவட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி குறைந்துள்ளதால் விலை கிடு, கிடுவென்று உயர்ந்துள்ளது. நாகர்கோவிலில் வடசேரி கனகமூலம் சந்தை, அப்டா மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக வரும் காய்கறிகளை விட மிக குறைந்த அளவே காய்கறிகள் வருகிறது.
இதனால் இந்த மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை படிப்படியாக உயர்ந்து காணப்பட்டது. கிலோ ரூ.25-க்கு விற்பனையான பீன்ஸ் கடந்த வாரமே கிலோ ரூ.90-ஐ தொட்டுவிட்டது. தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது.
அதிகபட்சமாக சின்ன வெங்காயம் ஒருகிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையே இது விற்பனையானது. இதேபோல் கேரட் விலையும் கிலோ 25 ரூபாயில் இருந்து 48 ரூபாயாக உயர்ந்து விட்டது.
இதேபோல் ஒரு கிலோ சேனை 35 ரூபாய், பீட்ரூட் ரூ.35, கத்தரிக்காய் ரூ.45, கோஸ் ரூ.20, வெண்டைக்காய் ரூ.30, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.25, உருளை ரூ.20, பல்லாரி ரூ.20, காளிபிளவர் ரூ.40, சவ்சவ் ரூ.45, தக்காளி ரூ.25-ரூ.30, இஞ்சி ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.