தொடர் மழை… உச்சத்திற்குப் போன காய்கறிகள் விலை
சென்னை: தொடர்மழையால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சென்னை தொடங்கி குமரி வரை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்துள்ளன.
கொடைக்கானலில் சாலை முற்றிலும் சேதமடைந்த காரணத்தால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் மலைக்காய்கறிகளான கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்றவைகளின் வரத்து முற்றிலும் முடங்கிப் போனது.
அழுகிய காய்கறிகள்
சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் கடந்த 10 நாட்களாக காய்கறி விலை உயர்ந்து கொண்டு வருகிறது.தொடர் மழை காரணமாக நிறைய காய்கறிகள் அழுகி சேதம் அடைவதால் காய்கறியின் அடக்க விலையை விட அதிகம் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர்.
மழையால் சேதம்
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கிருஷ்ணகிரி, ஓசூர், பெரியபாளையம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகிறது. மழையின் காரணமாக நிறைய காய்கறிகள் தற்போது அழுகி சேதம் அடைவதால் காய்கறி விலை உச்சத்தை எட்டி விட்டது.
கத்தரி, வெண்டைக்காய்
இதில் கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரை ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.வெளி மார்க்கெட்டில் உஜாலா கத்தரிக்காய் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரி கத்தரிக்காய் கிலோ 40 ரூபாய்க்கும், சாதாரண கத்தரிக்காய் 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தக்காளி விலை
தக்காளி கடந்த 1 வாரமாக ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
கேரட், பீன்ஸ்
கொடைக்கானலில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து போனதால் கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் அவரைக்காய் கிலோ ரூ.80க்கும், பாகற்காய் கிலோ ரூ.50க்கும், வெண்டைக்காய், கிலோ ரூ.40 க்கும் விற்கப்படுகிறது.