சிரிக்க வைக்கும் தக்காளி.. ரொம்ப சிரிக்க வைக்கும் பச்சை மிளகாய்.. காய்கறி விலை கொஞ்சம் போல குறைவு!
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக உச்சாணிக் கொம்பில் ஏறி நின்ற காய்கறி விலை, வரத்து அதிகரித்ததால் சற்றே குறைந்து மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது.
காய்கறி வரத்து அதிகரித்த காரணத்தால் தக்காளி, பச்சைமிளகாய் விலை கணிசமாக கிலோவிற்கு 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.
ஆனால், என்னதான் காய்கறி விலை குறைந்தாலும், கூடினாலும் விற்பனையாளர்களால முக்கால்வாசி பேருக்கு கிடைப்பதென்னவோ ஏமாற்றம்தான்.
ரசத்துக்கு கவலை இல்லை:
கடந்த வாரங்களில் கிலோ 60 ரூபாய்க்கு விற்ற தக்காளி 10 ரூபாய் குறைந்து 50 ரூபாயாக விற்பனை ஆகின்றது.
பச்சை மிளகாய் பத்து ரூபாய் குறைவு:
இதேபோல 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ பச்சை மிளகாய் 10 ரூபாய் குறைந்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
பீன்ஸ் 30 ரூபாய் குறைவு:
110 ரூபாய்க்கு விற்கப்பட்டு பீதியைக் கிளப்பிய பீன்ஸ் விலை குறைந்து கிலோ 80 ரூபாய்க்கு கிடைக்கின்றது.
சின்ன “தள்ளுபடி”:
இதேபோல் மற்ற காய்கறிகளும் சிறிதளவான விலை குறைவு மாற்றத்துடன் விற்கப்பட்டன.
விலை குறைந்த காய்கள்:
வெண்டைக்காய் ரூபாய் 35, கோவக்காய் ரூபாய் 30, கத்தரிக்காய் ரூபாய் 30, பீட்ரூட் ரூபாய் 40, முட்டைகோஸ் ரூபாய் 20 , முள்ளங்கி ரூபாய் 25, அவரைக்காய் ரூபாய் 60, சேனை ரூபாய் 35, சேம்பு ரூபாய் 35, உருளைக்கிழங்கு ரூபாய் 30, வெங்காயம் ரூபாய் 30 ஆகிய விலைகளில் விற்கப்பட்டது.
அள்ளி கொடுத்தவர்கள்:
காய்கறிகளைப் பொறுத்தவரை முன்பெல்லாம் கிலோ கணக்கில் வாங்கினாலும், கம்மியாக வாங்கினாலும் அள்ளிக் கொடுப்பார்கள் வியாபாரிகள். கொத்தமல்லி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை எல்லாம் காசில்லா கொசுறுதான்.
கிள்ளிக் கொடுக்கின்றார்கள்:
ஆனால், இப்போதைய நிலைமையில் காசுக்குத்தான் கறிவேப்பிலையும், கொத்தமல்லியும் கிடைக்கின்றது. காசு கொடுத்தால் கூட கிள்ளித்தான் கொடுக்கின்றார்கள். பூண்டும், இஞ்சியும் நாலே நாலு பல்லு இருந்தாலே நாற்பது ரூபாய் சொல்கின்றார்கள் வியாபாரிகள்.
காயாத காய்கறிக் கண்ணீர்:
மொத்தத்தில் விலை குறைந்தாலும் காய்கறி உணவை மட்டுமே நம்பியுள்ள மக்களின் கண்களில் வெங்காயம் உரிக்காமலே கண்ணீர் வருகின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.