தொடர் மழையால் கோயம்பேட்டிற்கு காய்கறி வரத்து குறைந்தது... விலை 2 மடங்கு எகிறியது
சென்னை: தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை எகிறியுள்ளது. 4 நாட்களுக்கு முன்பு ரூ.30-க்கு விற்ற தக்காளி தற்போது 2 மடங்கு உயர்ந்து ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது.
சென்னை மாநகர மக்களின் காய்கறி தேவைக்கு, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் லாரிகள் மூலம் காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விளைந்த காய்களை பறித்து விற்பனைக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வயல்களில் வெள்ளநீர் தேங்கியதால் காய்கறிகள் மூழ்கி அழுகி வீணாகியுள்ளன.
இதனால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. தினமும் 250 லாரிகள் வந்த இடத்தில் தற்போது 100 லாரிகள் மட்டுமே வருகிறது. இதனால், காய்கறிகளின் விலை 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது.
தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான வியாபாரிகளும், பொதுமக்களும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வர முடியாமல் போனது. இதனால் காய்கறிகள் விற்பனை மந்தமாகவே உள்ளது. தக்காளி ஒரு நாளைக்கு 70 லாரிகளில் வந்திறங்கும் தக்காளி தற்போது 30 லாரிகளில் மட்டுமே வரத்து உள்ளது. இதனால், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.30-க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.80 ஆக விலை உயர்ந்துள்ளது.
அதேபோல, காய்கறிகளின் விலையும் கடுமையாக அதிகரித்து உள்ளது. அவைகளின் விலை (ஒரு கிலோ) கீழே கொடுக்கப்பட்டுள்ளது ( 4 நாட்களுக்கு முன்பு இருந்த விலை அடைப்புகுறிக்குள் காட்டப்பட்டுள்ளது ):
பீன்ஸ் - ரூ.60 (ரூ.30). கேரட் - ரூ.50 (ரூ.30). நூக்கல் - ரூ.40 (ரூ.20). சவ்சவ் - ரூ.30 (ரூ.15). பீட்ரூட் - ரூ.30 (ரூ.20). முட்டைக்கோஸ் - ரூ.15 (ரூ.10). பச்சை மிளகாய் - ரூ.25 (ரூ.20). கத்தரிக்காய் - ரூ.40 (ரூ.20). முருங்கைக்காய் - ரூ.60 (ரூ.40). வெண்டைக்காய் - ரூ.30 (ரூ.20). பல்லாரி வெங்காயம் - ரூ.50 (ரூ.30). சாம்பார் வெங்காயம் - ரூ.50 (ரூ.40). காலிபிளவர் (ஒரு எண்ணிக்கை)- ரூ.30 (ரூ.20). புடலங்காய் - ரூ.25 (ரூ.20). உருளைக்கிழங்கு - ரூ.20 (ரூ.13).
இந்நிலையில், தென் மாவட்டங்களில் பயிரிடப்பட்ட வாழைகள், தொடர் மழை காரணமாக அதிக அளவில் முறிந்துவிழுந்தன. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவில் வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவை வருகின்றன. இதன் காரணமாக அவற்றின் விலை குறைந்துள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு வாழைக்காய் ஒன்று ரூ.8-க்கு விற்பனையானது. தற்போது ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ரூ.50-க்கு விற்பனையான பெரிய வாழைத்தண்டு ரூ.30 ஆகவும், ரூ.20-க்கு விற்பனையான வாழைப்பூ ரூ.10 ஆகவும் விலை சரிந்துள்ளது.