பொங்கல் வியாபாரம் களைகட்டியது: கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், கரும்பு விலை வீழ்ச்சி
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கரும்பு, மஞ்சள் கொத்து, பழங்கள், காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன. கரும்பு விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருகின்றன. பொங்கல் திருநாளையொட்டி கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவையும் லாரி லாரியாக குவிந்துள்ளது.
காய்கறிகள் வரத்து அதிகமாக இருப்பதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் லாரியில் இருந்து காய்கறிகள், கரும்பு கட்டுகள் முழுமையாக இறக்கப்படாமல் உள்ளன.
கரும்பு விலை வீழ்ச்சி
பணத்தட்டுப்பாடு பிரச்சனையால் கரும்பு வாங்க யாரும் வரவில்லை. கடந்த ஆண்டு 10 கரும்புகள் ரூ.300 முதல் 600 வரை விற்பனை ஆகிய நிலையில் தற்போது ரூ.150 முதல் 200 வரை மட்டும் விற்பனையாகிறது இதனால் கரும்புகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னும் இரு தினங்கள் இருப்பதால் விலை உயரும் என்று நம்பிக்கை இருப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
காய்கறிகள் தேக்கம்
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காய்கறிகள் வருவது மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோயம்பேட்டுக்கு அதிக அளவில் காய்கறிகள் வருகிறது. ஆனால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகம் இல்லாத காரணத்தால் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் காய்கறிகள் தேங்கி கிடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பணத்தட்டுப்பாடு
மார்க்கெட்டுக்கு 500 லாரிகளில் காய்கறி, கரும்பு கட்டு, மஞ்சள் கொத்து வந்தாலும் 50 லாரிகளில் உள்ள பொருட்கள் இறக்கப்படாமல் அப்படியே நிற்கின்றன.
ஒரு புறம் வறட்சி மறுபக்கம் பணத்தட்டுப்பாடு ஆகிய காரணங்கள்களால் மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இதனால் வியாபாரம் இல்லாததால் நிறைய காய்கறிகள் வீணாகி குப்பையில் கொட்டப்படுவதாக வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.