வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை உயர்வால் மக்கள் அவதி
நெல்லை: பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் வெண்டை மற்றும் கத்தரிக்காய் விலை அதிகரித்துள்ளது.
கீழப்பாவூர் வட்டாரத்தில் போதிய மழை இல்லாததால் காய்கறி விளைச்சல் குறிப்பாக வெண்டைக்காய், கத்திரிக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு வெண்டை, கத்தரிக்காய் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெண்டை மற்றும் கத்தரிக்காய் 3 டன் முதல் 4 டன் வரை விற்பனைக்கு வந்தது. இதனால் வெண்டை ரூ.3 முதல் 5க்கும் கத்தரிக்காய் ரூ.10 முதல் 15 வரைக்கும் விற்பனையானது. ஆனால் மாலை வெண்டை, கத்தரிக்காய் 2 டன்னுக்கு குறைவாகத்தான் மார்க்கெட்டுக்கு வந்தது. இதனால் விலையில் அதிரடியாக ஏற்றம் காணப்பட்டு வெண்டை கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.16க்கும், கத்தரிக்காய் ரூ.20 முதல் 25 வரை விற்பனையானது.
மற்ற காய்கறிகளின் விலை விபரம்: தக்காளி ரூ.5, மாங்காய் ரூ.22, மிளகாய் ரூ.7 முதல் ரூ.10, பூசணிக்காய் ரூ.4, சுரைக்காய் ரூ.2, தடியங்காய் ரூ.4, புடலை ரூ.7, அவரைக்காய் ரூ.12, மல்லி ரூ.15 முதல் ரூ.20, கறிவேப்பிலை ரூ.12, சிறிய வெங்காயம் ரூ.18 முதல் ரூ.21, பல்லாரி ரூ.6 முதல் 7, சிறு கிழங்கு ரூ.15 முதல் 40, சாம்பார் வெள்ளரி ரூ.2, பாகற்காய் ரூ.15, சீனி அவரை ரூ.15 விற்பனையானது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர்.