வெள்ளம் வடிந்தது: சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தில் போக்குவரத்து துவக்கம்
சென்னை: செம்பரபாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவங்கியுள்ளது.
கனமழையால் சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதையடுத்து செம்பரபாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஏரியில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. அதனால் ஏரியின் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. அடையாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செம்பரபாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அடையாற்றிலும் வெள்ளம் குறைந்துள்ளது. இதனால் மறைமலை அடிகள் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவங்கியுள்ளது. ஏரியின் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் வடியத் துவங்கியுள்ளது. ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவுக்கு அதிகரித்துள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீராணம், மதுராந்தகம் ஏரிகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.