பரனூர் டோல்கேட் உடைப்பு.. ஒரு வாரம் ஃப்ரீ.. அரசுக்கு வாகன ஓட்டிகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
Recommended Video
சென்னை: செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பரனூர் சுங்கச்சாவடி. ஏறத்தாழ இது சென்னையின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது.
தென்மாவட்டங்கள், கிழக்கு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து அந்த மாவட்டங்களுக்கு செல்ல கூடிய வாகனங்கள் ஆகியவை இந்த சுங்கச்சாவடியை கட்டாயம் கடந்தாக வேண்டும்.
எனவே, முக்கியமான பண்டிகை காலங்களில், சென்னையில் இருந்து செல்லும் வாகனங்களும், பின்னர் பிற மாவட்டங்களிலிருந்து திரும்பக்கூடிய வாகனங்களாலும், பரணுர் டோல் கேட் என்பது கூட்ட நெரிசலுடன் காணப்படும்.
நொறுக்கப்பட்ட பரனூர் டோல்கேட்.. ஆபீசில் வைத்திருந்த ரூ.18 லட்சத்தை காணோமாம்.. போலீஸில் புகார்!
அடி, உதை
இந்த நிலையில்தான், கடந்த 26ஆம் தேதி, அதிகாலை சுமார் 1 மணி அளவில் கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசு பேருந்து, பரனூர் சுங்கச்சாவடியை கடக்க முற்பட்டது. அப்போது பஸ் டிரைவர் நாராயணன் மற்றும் சுங்க சாவடியில் உள்ள வட இந்திய ஊழியர்கள் நடுவே தகராறு ஏற்பட்டுள்ளது. பஸ் டிரைவரை சுங்கச்சாவடி ஊழியர்கள் அடித்து உதைத்துள்ளனர். இதை பார்த்ததும் அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் மற்றும் இந்த டோல்கேட்டில் காத்திருந்த வாகனங்களில் இருந்த பயணிகள், கடும் ஆத்திரம் அடைந்து கீழே இறங்கி வந்து சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கினர். சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.
ஒரு வாரம் இலவசம்
சுங்கச்சாவடி முழுக்க சேதமடைந்து விட்ட நிலையில், டோல்கேட் கட்டணம் இன்றி தற்போது வாகனங்கள் அதைத் தாண்டி பயணித்து வருகின்றன. சுங்கச்சாவடியை சீரமைக்க, ஒரு வாரமாவது ஆகும் என்பதால் அதுவரை கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிகிறது. எனவே, வாகன ஓட்டிகள் வேகமாகவும், மகிழ்ச்சியாகவும் அந்த இடத்தை கடந்து செல்வதை பார்க்க முடிகிறது. இது தொடர்பாக சுங்க சாவடியை கடந்து செல்லக்கூடிய சில வாகன ஓட்டிகளிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
மொழி பிரச்சினை
மினி லாரி ஓட்டுநரான சிதம்பரம் என்பவர் இதுபற்றி கூறுகையில், பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் வட இந்தியர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு, நாம் சொல்வது புரிவதில்லை. உடனே வண்டியை ஓரம் கட்ட சொல்லி அடாவடி செய்கிறார்கள். மொழி தெரியாத நபர்களால் தினமும் வேதனையை அனுபவித்து வருகிறோம். பரனூர் சுங்கச்சாவடியில் இதே போன்று தான் நடந்தது என்று தெரிவித்தார். மேலும் சில வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த சுங்கச்சாவடி என்பது காலாவதியாகிவிட்டது. இருப்பினும் அதை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
பல மடங்கு
போட்ட முதலீட்டை விட பல மடங்கு அதிகமாக சுங்கச்சாவடி உரிமையாளர் சம்பாதித்து வருகிறார்கள், மக்களின் பணம் விரையமாகிக் கொண்டு இருக்கிறது. எனவே இந்த சுங்கச்சாவடியை இத்தோடு மூடி விட வேண்டும் என்று குமுறுகிறார்கள். மேலும் சில வாகன ஓட்டிகள் கூறுகையில், சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு சுங்கச்சாவடி மூலமாக ஈட்டப்படுகிறது என்கிறார்கள். இதுவரை எத்தனை கோடி ரூபாய்க்கு சாலை போடப்பட்டது? எத்தனை கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது? என்பது வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட வேண்டும். அல்லது சுங்கச்சாவடி என்பது பணம் கறக்கக்கூடிய ஒரு இடமாகவே மக்களால் பார்க்கப்படும். அரசு இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.
பாலபாரதி சுங்கச் சாவடி மோதல்
இதனிடையே பரனூர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய போது அங்கே இருந்த 18 லட்சம் ரூபாய் திருடப்பட்டு விட்டதாக அந்த சுங்கச்சாவடியில் பொறுப்பாளர் விஜய பாபு செங்கல்பட்டு தாலுகா போலீசில் இன்று புகார் தெரிவித்துள்ளார். தற்போது பெரும்பாலும் ஃபாஸ்ட்டாக் முறையில் பணம் வசூலிக்கப்படும் நிலையில், இவ்வளவு பணம் சுங்கச்சாவடியில் ஏன் இருந்தது என்ற சந்தேகமும் எழுகிறது. சமீபத்தில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி சுங்கச்சாவடி ஒன்றை, கடக்க முற்பட்டபோது பணம் கேட்டு தகராறு செய்ததுடன், துப்பாக்கி ஏந்திய ஒருவர் அவரது காரை நோக்கி ஓடி வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை பாலபாரதி முன்வைத்திருந்தார். இப்படி சுங்கச்சாவடிகள் தமிழகம் முழுக்க பெரும் அடாவடி இடங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. சுங்கச் சாவடிகளை படிப்படியாக அகற்றி, மக்களின் பணத்தை மிச்சம் பிடிக்க அரசு உதவுமா? என்ற கேள்வி பல வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் குமுறலாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
அரசு நடவடிக்கை
அதேநேரம், சுங்கச்சாவடி நிர்வாக வட்டாரத்தில் கேட்டபோது, சாலை போடுவதோடு, கடமை முடிந்து விடுவதில்லை. சாலையை பழுது பார்ப்பது உள்ளிட்ட தொடர் செலவினங்கள் எங்களுக்கு இருக்கின்றன. எனவேதான் வசூல் செய்கிறோம் என்கிறார்கள். அதேநேரம், பரனுர் சுங்கச்சாவடியில் அவசர தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் கிடையாது. கழிப்பிட வசதி கிடையாது என்று வாகன ஓட்டிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இவ்வாறு அதிகப்படியாக கட்டணம் வசூலிப்பது முறையா? என்ற கேள்விக்கு இதுவரை யாரும் பதில் அளிப்பார் கிடையாது.