சென்னை பெசண்ட் நகரை கலக்கிய கோலகலமான வேளாங்கண்ணி தேர் திருவிழா..
சென்னை: சென்னை கடற்கரையோரம் அமைந்துள்ள பெசண்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி, இன்றுடன் முடிவடையும் 11 நாள் திருவிழாவின் உச்சகட்ட திருவிழாவான தேர்த்திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் 44வது ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தேவ அழைத்தல் விழா, உழைப்பாளர்கள் விழா, துறவற சபைகள் விழா, இளைஞர்கள் விழா, பக்த சபைகள் விழா, நற்கருணை விழா, ஆசிரியர்கள் விழா, நலம்பெரும் விழா என தினந்தோறும் திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி திருப்பலி நடத்தி தேர் பவனியைத் தொடங்கி வைத்தார். அன்னை வேளாங்கண்ணியின் தேர் பவனி கோயிலில் இருந்து புறப்பட்டு பெசண்ட் நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து பின் தேவாலயத்தை அடைந்தது.
முன்னதாக, அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கியதையொட்டி அவருடைய உருவச்சிலையை தேவாலய வளாகத்தில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி திறந்து வைத்தார்.
விழாவின் இறுதி நாளான இன்று காலை முதல் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன. மாலை 5.30 மணிக்கு கொடி இறக்கத்துடன், 11 நாள் விழா நிறைவு பெறுகிறது.