வெள்ளம்புத்தூர் தலித் சிறுவன் கொடூர கொலை: குற்றவாளியை காவலில் எடுக்கிறது போலீஸ்
வெள்ளம்புத்தூர் சிறுவன் கொலை வழக்கு குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வெள்ளம்புத்தூர் சிறுவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லைநாதனை காவல் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆராயி தனது 10 வயது மகன் சமயன் மற்றும் 14 வயது மகள் தனத்துடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது கொடூரமாக தாக்கப்பட்டார்.
சிறுமியை பலாத்காரம் செய்த மர்மநபர், 10 வயது சிறுவன் சமயனைக் கொலை கொடூரமாக கழுத்தறுத்து கொன்றார். ஆராயி மற்றும் அவரது மகள் தனம் இருவரும் படுகாயமடைந்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். ஒருமாத கால தேடுதல் வேட்டையில் புவனகிரியை சேர்ந்த தில்லைநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6 சவரன் நகைகள், 10க்கும் மேற்பட்ட செல்போன்கள், கொலைக்கு பயன்படுத்திய 2 இரும்பு ராடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தில்லைநாதனுக்கு உதவியதாக அம்பிகா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் இருவரையும் திருக்கோவிலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களிலும் தில்லைநாதன் இதேபோல கொடூர தாக்குதல் நடத்தி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆராயியின் 13-வது மகளை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தில்லைநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கடலுர் சிறையிலுள்ள தில்லைநாதனை ஒருவாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி அரகண்டநல்லூர் போலீஸார் விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை விசாரித்து வரும் விழுப்புரம் மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து இதன் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது,