லாரியில் தலைமுடி சிக்கி பெண் பலி... ஷேர் ஆட்டோவில் சென்ற போது சோகம்
வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ஷேர் ஆட்டோவில் பயணித்த பெண் ஒருவர், அருகில் வந்து கொண்டிருந்த லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (45). இவரது மனைவி மோகனா(38). இவர்கள் நேற்று, தங்களது குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களுக்கு சென்றுள்ளனர். பின்னர், பெங்களூரு செல்வதற்காக இவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து ஷேர்ஆட்டோவில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
ஷேர் ஆட்டோ மஞ்சம்பாடி ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி ஒன்று ஷேர் ஆட்டோவை நெருங்கிய படி சென்றுள்ளது. இதனிடையே மோகனாவின் தலைமுடி அருகில் வந்த லாரியின் முன்பக்க கதவில் சிக்கியது. இதனால், ஆட்டோவில் இருந்து வெளியே விழுந்த மோகனா, லாரியில் சிக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.