நீட் அடிப்படையில் நேரடி மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சி.எம்.சி.
நீட் அடிப்படையிலான நேரடி மருத்துவ மாணவர் சேர்க்கையை வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிறுத்தி வைத்துள்ளது.
வேலூர்: நீட் அடிப்படையிலான நேரடி மருத்துவ மாணவர் சேர்க்கையை வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.
வேலூர் சி.எம்.சி. மருத்துவகல்லூரியில் மருத்து படிப்புக்கு சேரும் மாணவர்களுக்கு தனியே ஒரு தேர்வு வைக்கப்படும். அதில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மற்றொரு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
அந்த தேர்வானது மாணவர்களின் சமூக அக்கறை மற்றும் கிராமப்புற சேவையை மதிப்பிடக் கூடியது. ஆனால் தற்போது நீட் மூலமாக நேரடி மருத்துவ சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
இது தாங்கள் கடைபிடித்து வரும் நடைமுறைக்கு எதிரானது என ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் அக்டோபர் 11-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 100 இடங்கள் உள்ளன. இதில் 85 இடங்கள் சிறுபான்மையினருக்கானது. எஞ்சிய 15 இடங்கள் பொதுப்பிரிவினருக்கானது.
நீட் மூலமான நேரடி சேர்க்கைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வரும் வரை வேலூர் சி.எம்.சி. மருத்துவனை நிர்வாகம் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது இதில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு மட்டும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 99 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதேபோல் உயர் மருத்துவ படிப்பிலும் ஒரு மாணவர் மட்டும் சேர்க்கப்பட்டு 59 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.