வேலூரில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது தடியடி!
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து வேலூரில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளது.
Recommended Video
வேலூர்: தமிழக அரசுப் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து வேலூரில் இன்று மறியல் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
தமிழக அரசு பேருந்து கட்டணங்களை கடந்த வாரம் திடீரென்று உயர்த்தியது. இந்த அதிக கட்டண உயர்வால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்து கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தின. இதற்கு ஆதரவாக, பல்வேறு இடங்களில் பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. சென்னை, வேலூர் என பல இடங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர். வேலூரில் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2000 பேர் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மறியலில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நேற்று மதுரையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.