வேலூருக்கு வந்தால் பிணமாகத் தான் செல்வாய் என அதிமுகவினர் மிரட்டினர்: பழ. கருப்பையா
சென்னை: வேலூருக்கு வந்தால் பிணமாகத் தான் திரும்பிச் செல்வாய் என்று அம்மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அண்மையில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழ. கருப்பையாவை முதல்வர் ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கினார். இதையடுத்து அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டில் உள்ள அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கற்களை வீசித் தாக்கினர்.
இது குறித்து கருப்பையா கூறியிருப்பதாவது,
நீக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி தலைமை என்னை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. அதன் பிறகும் கட்சியில் இருக்க விரும்பாமல் நான் என் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தேன்.
மீடியா
கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டது, எனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து பத்திரிக்கையாளர்கள் என்னிடம் கருத்து கேட்டனர். நானும் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்திருந்தேன்.
தாக்குதல்
நான் ஊடகங்களில் கருத்து தெரிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் என் கார் கண்ணாடியும் உடைந்துள்ளது. தாக்குதல் சம்பவத்தால் என் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். இதை கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சவாலாக நினைக்கிறேன்.
வேலூர்
வேலூரில் தமிழச் சங்கம் ஒன்றை நான் துவங்கி வைக்க உள்ளது குறித்து அம்மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நீ வேலூருக்கு வந்தால் பிணமாகத் தான் திரும்பிச் செல்வாய் என்று எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது பற்றி அறிந்த விழா ஏற்பாட்டாளர்கள் எனக்கு போன் செய்து ஐயா, நீங்கள் வேலூருக்கு வராதீர்கள் என்று கூறியுள்ளனர். இது போன்ற செயல்களால் வேதனையாக உள்ளது.