வேலூரில் அடித்த வெயிலுக்கு இதமாய் பெய்த ஆலங்கட்டி மழை… 2 பேர் பலி
வேலூர்: அக்னி நட்சத்திர வெயிலுக்கு வேலூர் மாவட்ட மக்கள் நேற்று பகலில் மக்களை வாட்டிய வெயிலின் தாக்கத்தை மாலையில் பெய்த மழை தணித்தது. குடியாத்தத்தில் மின்னல் தாக்கி விவசாயி பலியானார். கடும் வெயிலுக்கு அரக்கோணத்தில் மூதாட்டி ஒருவர் பலியானார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 4ஆம்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் இன்று வரை வெப்ப காலநிலையும் மழை கால நிலையும் மாறி மாறி நிலவி வருகிறது. கடந்த 4ஆம்தேதி முதல் 7ஆம்தேதி வரை வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தொடவில்லை மிதமான வெயிலே நிலவியது. ஆனால் 8ஆம்தேதி 101.5 டிகிரி வெயில் கொளுத்தியது. அதன் பின்னர் 14,15,17-ந்தேதிகளில் திடீரென மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. கடந்த 18ஆம்தேதி வரை வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.
அதன் பின்னர் கடந்த வாரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. 24ஆம்தேதி முதல் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் உக்கிரம் அதிகரித்தது. குறிப்பாக 24 ஆம்தேதி 107.6 டிகிரியும், 25ஆம்தேதி 108 டிகிரியும் வெயில் அளவு பதிவானது. மேலும் வெயிலின் உக்கிரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று 104 டிகிரியாக மட்டுமே பதிவானது.
பாட்டி பலி
அரக்கோணம், திருப்பத்தூர், குடியாத்தம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து. இந்த வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் அரக்கோணம் அருகே மூதாட்டி ஒருவர் பலியானார். அரக்கோணம் அருகே உள்ள முதூர் கிராமத்தை சேர்ந்த அந்த மூதாட்டியின் பெயர் அமாவாசை அம்மாள் (வயது81). மூதாட்டியின் சாவு குறித்து அரக்கோணம் தாலுகா போலீசாரும் தாசில்தாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்கட்டி மழை
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் மாவட்டம் முழுவதும் இருண்ட மேகங்கள் திரண்டு வந்தன. சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் லேசாக பெய்த மழை பின்னர் வெளுத்து வாங்கியது. வேலூர் நகரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அணைக்கட்டு சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
உற்சாக சிறுவர்கள்
குடியாத்தம், கே.வி.குப்பம், பள்ளிகொண்டா பகுதிகளில் லேசான மழை பெய்தது. காட்பாடி, சத்துவாச்சாரி, பேரணாம்பட்டு பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையாக விழுந்த ஆலங்கட்டிகளை சிறுவர்-சிறுமிகள் கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியும் பலத்த மழை பெய்தது. வேலூர் மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழையால் வெயிலின் உக்கிரம் தணிந்து குளுமையை மக்கள் அனுபவித்தனர்.
சாய்ந்த புளியமரம்
மழை காரணமாக அணைக்கட்டு மூலைகேட் பகுதியில் சாலையோரம் புளியமரம் வேரோடு சாய்ந்தது. வேலூரில் பெய்த மழை மற்றும் காற்று காரணமாக பல இடங்களில் பேனர்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்ததால் மக்களுக்கு பாதிப்பும் ஏற்பட்டது.
இடிதாக்கி பலி
குடியாத்தம் பகுதியில் இடியுடன் மழை பெய்தது. இடி தாக்கி விவசாயி பலியானார். குடியாத்தம் சென்னாங்குப்பத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன். நேற்று மழை பெய்து கொண்டிருந்த போது வெளியில் கட்டப்பட்டு இருந்த தனது மாட்டை அவிழ்த்து கொட்டகையில் கட்டுவதற்காக மழைக்குள் சென்றார்.அந்த நேரத்தில் அவரை இடி தாக்கியது. இதில் அவர் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். பலியான ராதாகிருஷ்ணனுக்கு சுமதி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
மழைக்கு வாய்ப்பு
அக்னி நட்சத்திர வெயிலுக்கு வேலூர் மாவட்ட மக்கள் நேற்று பகலில் மக்களை வாட்டிய வெயிலின் தாக்கத்தை மாலையில் பெய்த மழை தணித்தது. குடியாத்தத்தில் மின்னல் தாக்கி விவசாயி பலியானார். கடும் வெயிலுக்கு அரக்கோணத்தில் மூதாட்டி ஒருவர் பலியானார். அடுத்த 24 மணி நேரத்தில், வட, தென் மாநிலங்களில், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.