வேலூரில் சதமடித்த வெயில்- அனல் காற்றால் மக்கள் அவதி- வெறிச்சோடிய சாலைகள்
கோடைக்கு முன்பே வேலூரில் 100 டிகிரி வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
வேலூர்: வேலூரில் நேற்று 100 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். அனல் காற்று வீசியதால் சாலைகள் வெறிச்சோடின.
வேலூர் மாவட்டத்தில் கோடையின் தொடக்கத்திலேயே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கிறது. கடந்த 15ஆம்தேதி 96 டிகிரியாக அடித்த வெயில், நேற்று முன்தினம் 98 டிகிரியை தொட்டது. பின்பு படிப்படியாக உயர்ந்து, நேற்று 100.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
கடும் வெயில் காரணமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. வயதானவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.
மார்ச் மாதத்திலேயே வெயில் கொடுமை அதிகமாக இருப்பதால் இன்னும் 2 மாதங்கள் எப்படி வெயிலை சமாளிக்க போகிறோம்? என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்ப நிலையைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதனால், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு வெயில் அளவு 115 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.