வேலூர் சிறை கைதிகளுக்கு செல்போன்: காவலர் சஸ்பெண்ட், 2 பேர் டிரான்ஸ்பர்
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் பணம் பெற்றுக்கொண்டு கைதிகளுக்கு செல்போன் விநியோகம் செய்த காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து 2 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வேலூர் ஆண்கள் மத்திய சிறை வளாகத்தில் சுமார் 900 பேர் தண்டனை மற்றும் விசாரணைக்கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகள், செல்போன் பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்தது.
காவலர்கள் உதவி
குறிப்பிட்ட நேரத்தில் சிறை வளாகத்துக்குள் வீசப்படும் பார்சல்கள், சிறைக் காவலர்கள் உதவியுடன் கைதிகளுக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதிரடி ரெய்டு
இதைத்தொடர்ந்து, வேலூர் சிறையில் கைதிகளிடம் இருக்கும் செல்போன்களை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், தினமும் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் திடீர் சோதனை நடத்தி, செல்போன்களை பறிமுதல் செய்கின்றனர்.
வங்கிக்கணக்கில் பணம்
இந்நிலையில், வேலூர் மத்திய சிறைக் காவலர் சிலம்பரசன் என்பவரின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால், கைதிகளுக்கு அவர் செல்போன் விநியோகிப்பதாகவும், அவருடன் பணியாற்றும் சில காவலர்கள் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த புகார் மீது ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து சிறைக்காவலர் சிலம்பரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கைதிகள் மாற்றம்
செல்போன் பயன்படுத்திய கைதி தியாகராஜன் என்பவர் கோவை சிறைக்கும், சக்திவேல் என்பவர் கடலூர் சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வங்கிக்கணக்கில் பணம்
இதுகுறித்து, வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி முகமது, ‘‘சிறைக் காவலர் சிலம்பரசன் வங்கிக் கணக்கில் கைதிகள் சிலர் ரூ.27 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளனர். பணம் கொடுத்தவர்களுக்கு செல்போன் வழங்கியது விசாரணையில் உறுதியானது.
62 செல்போன்கள் பறிமுதல்
கடந்த 2 மாதங்களில் வேலூர் சிறையில் கைதிகளிடமிருந்து 62 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளோம். அடுத்த கட்டமாக போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்படும்'' என்றார்.