சேலம், விருதுநகரில் வறுத்தெடுக்கும் வெயில்… 40டிகிரி செல்சியஸ் தொட்டது
சென்னை: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழகம் முழுவதும் வெயில் தகித்து வருகிறது.
தமிழ்நாட்டில் சேலம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமையான இன்று அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக மற்றும் 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு தினங்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலூரா வேலூரா?
வெயிலுக்கு பெயர் போன வேலூர் மாவட்டத்தில், சில மாதங்களாக, 90 டிகிரியில் இருந்து, 99 டிகிரி வரை வெப்பம் பதிவானது. கடந்த மாதம், 20ம் தேதி முதல் முறையாக, 100 டிகிரியை வெயில் தொட்டது. அதிகபட்சமாக நேற்று 107 டிகிரி பாரன்ஹீட் ( 41.5 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவானது. ஆனால் இன்றைக்கு வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 33 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்துள்ளது.
செஞ்சுரி வெயில்
வெப்பம் செஞ்சுரி வேலூரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, செஞ்சுரியை குறைக்காமல், வெயில் கொளுத்துவதால், மக்கள் பீதியில் உள்ளனர்.. இதேபோல் கோவை, தருமபுரி, கரூர் பரமத்திவேலூர், மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
வெயில் அளவு (டிகிரி செல்சியஸ்)
அருப்புக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூர் இன்றைய தினம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.அதற்கு அடுத்த படியாக கிருஷ்ணகிரியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
35டிகிரி செல்சியஸ்
கடலூர், திருவண்ணாமலை நகரங்களில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும், ஈரோடு, திருப்பூர், உதகையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
ராஜபாளையம், வேலூர்
சென்னை, காஞ்சிபுரம், ராஜபாளையம், தாம்பரம்,வேலூரில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. நாகர்கோவில், தூத்துக்குடி,திருநெல்வேலியில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
கரூரில் தவிப்பு
வெப்பமண்டல பகுதியான கரூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதில், கோடை காலம் துவங்கிய நிலையில், பகல் நேரங்களில் வெயில் புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கி வருகின்றனர்.
குளிர்பானங்களை தேடி
பகலில் வாட்டும் வெப்பம், இரவில் நேரங்களில் மின் நிறுத்தம் என மக்களை பாடாய்படுத்துகிறது. இதனால் வெயில் சுட்டை தணிக்க குளிர்பான கடைகள், இளநீர், தர்பூசணி போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஏரி குளங்களில்
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், சிறுவர்கள் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க அருகிலுள்ள ஏரி, குளங்களில் குளிக்க படையெடுக்கின்றனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் நீர் நிரம்பியுள்ளதால் அதில்,சிறுவர்கள் குளித்து மகிழ்கின்றனர்.
பெற்றோர்கள் கண்காணிப்பு
அதே சமயத்தில் ஆழமான குளங்களில் குளிக்கும் சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை நீச்சல் குளங்களில்
கோடை வெப்பத்தை சமாளிக்க மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் சிறுவர்களும், பெரியவர்களும் குவிந்து வருகின்றனர். மாலை நேரங்களில் கடற்கரைகளில் காற்று வாங்க வரும் கூட்டமும் அதிகரித்துள்ளது.