மூளைச் சாவு அடைந்த வேலூர் தொழிலாளியின் கிட்னி, கல்லீரல் தானம்
வேலூர்: வேலூரில் மூளைச் சாவடைந்த தொழிலாளியின் கிட்னி, கல்லீரல் தானமாக அளிக்கப்பட்டது. இதயம் ஹெலிகாப்டர் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.
வேலூரில் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தொழிலாளி அதிகாலை மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் வேறொருவருக்கு பொருத்த அவரது இதயம் ஹெலிகாப்டர் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.
சாலை விபத்து:
வேலூர் சத்துவாச்சாரி காந்திநகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் செல்வராம் (45). தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், கடந்த டிச.25 ஆம் தேதி பெருமுகை பகுதியில் சாலை விபத்தில் தலையில் காயமடைந்த செல்வராம் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூளைச்சாவு:
சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை செல்வராம் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து அவரது மனைவியின் விருப்பத்தின் பேரில் கிட்னி, கல்லீரல் தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
இதயமும் தானம்:
இதனைத் தொடர்ந்து மோகன் பவுண்டேஷன் மூலம் சென்னையில் உள்ளவருக்கு இதயத்தை பொருத்துவதற்காக ஹெலிகாப்டரில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.