செவிலியர்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது : அரசுக்கு வேல்முருகன் கண்டனம்
செவிலியர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று வேல்முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார். சென்னை : செவிலியர்களின் போராட்டத்தை கண்டும் காணாதது போல இருக்கும் தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமை
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகமெங்குமிருந்து திரண்டு சென்னை வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தேனாம்பேட்டை மருத்துவப் பணிகள் இயக்குநரக (டி.எம்.எஸ்) வளாகத்தில் திரண்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், நியாயமான கோரிக்கை வைத்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படி கைது செய்த அவர்களை திருமண மண்டபம் போன்றவற்றில் சிறை வைத்து உணவு, தண்ணீர். கழிப்பறை வசதி எதுவும் கிடைத்துவிடாதபடி செய்திருக்கின்றனர்.
சித்ரவதைக்கு ஆளாகும் செவிலியர்கள்
சென்னை டி.எம்.எஸ் வளாகம் மழையின் காரணமாக சேறும் சகதியுமாக உள்ளது. அங்கு சிறை வைக்கப்பட்டிருக்கும் 6,000 செவிலியர்களில் கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் கைக்குழந்தை உடையவர்களும் உள்ளனர். அப்படியிருந்தும் அவர்களுக்கு உணவோ, தண்ணீரோ, குழந்தைகளுக்குப் பாலோ, எதற்கும் அனுமதிக்கப்படவில்லை. வளாகத்தில் இருந்த கழிப்பிடத்தைக்கூட மூடிவிட்டார்கள்.
கொடுமை செய்யும் அரசு
நேற்று காலையிலிருந்து பகல் முழுவதும் மற்றும் இரவு முழுவதுமே இந்தக் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் செவிலியர்கள். அவர்கள் யாரும் வெளியில் செல்லவே முடியாதபடி தடுப்பரணாய் நின்றுகொண்டிருக்கின்றனர் காவலர்கள். இந்த சித்திரவதைகளையும் தாங்கிக் கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் செவிலியர்கள். இப்படி ஒரு கொடுஞ்செயலை இந்தியாவில் எந்த ஒரு மாநில அரசும் செய்ததாக சரித்திரமில்லை.
மூன்று கோரிக்கைகள்
செவிலியர்கள் மொத்தமே மூன்று கோரிக்கைகளைத்தான் முன்வைக்கின்றனர்; மூன்றுமே மிக மிகச் சாதாரண கோரிக்கைகள் தான். 1962 பிப்ரவரி 1ந் தேதியிட்ட பொது சேவை அரசாணை எண் 191ஐ பின்பற்றி பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியத்தின்கீழ் செவிலியர்களைக் கொண்டுவருதல், வெளிப்படையான ஊழலற்ற பணியிட மாறுதல் பெறுதல், செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்பி, வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 8 மணி நேரமாக உறுதிப்படுத்துதல்.
பணி நிரந்தரம் இல்லை
இத்தனைக்கும் மருத்துவர் தேர்வாணையத்தின் மூலம் தகுதித் தேர்வினை எழுதித் தேர்வாகி 2015ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டவர்கள் இந்த 11,000 செவிலியர்களும்வெறும் 7,000 ரூபாயே மாத ஊதியம்; பணிநிலைப்பும் செய்யப்படாமல் இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டனர். இதனால் 2016ஆம் ஆண்டிலிருந்தே போராடி வருகிறார்கள்.
எடப்பாடி அரசால் வேதனை
உச்ச நீதிமன்றம் சொல்லி அமைக்கப்பட்ட 6ஆவது ஊதியக் குழு, செவிலியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.32,000 ஊதியத்தைப் பரிந்துரைத்திருக்கிறது. ஆனால் அதைக் கண்டுகொள்ளவே தயாரில்லை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. ஆனால், அதை விடுத்து மாவட்டம் தோறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
வேலைநிறுத்தம் அறிவிப்பு
செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த நவம்பர் 1ந் தேதி முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடும் போராட்டத்தைத் தொடங்கினர். நவம்பர் 15ந் தேதி வரை நடந்த அந்த போராட்டத்தின்போது, 6ஆவது ஊதிய குழுவின்படி மாத ஊதியம் ரூ.32,000 வழங்க முன்வரவில்லையென்றால் 16ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்திலேயே ஈடுபடுவதென்று அறிவித்தனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
"கோரிக்கைகள் குறித்துப் பேச செவிலியர் சங்கத்திற்கு உடனடியாக அழைப்பு வரும்" என அரசு சார்பில் உறுதி கூறப்படவே, போராட்டம் அப்போது ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், எந்த அழைப்பும் வராத பட்சத்தில்தான் நேற்று சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் செவிலியர்கள்.
எதற்காக அவுட் சோர்சிங் ?
செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசிடம் பணமில்லையா? அப்படியென்றால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் பல நூறு கோடிகளை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்களே ஏன்? அரசுப் பணிகளையும் இப்போது அவுட்சோர்சிங்கிற்கு விடுகிறார்கள்; அவுட்சோர்சிங் எடுப்பவருக்கு முழு ஊதியத்தையும் கொடுத்துவிடுகிறார்கள்; ஆனால் அவரோ தன் கீழுள்ள பணியாளருக்கு வெறும் 7,000 ரூபாய் கொடுத்துவிட்டு மீதி 28,000 ரூபாயை அமுக்கிக் கொள்கிறார்.
செவிடன் காதில் ஊதிய சங்கு
தமிழகம் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதைவிட சூறையாடப்படுகிறது என்பதுதான் உண்மை. இதனால்தான் கல்வியும் மருத்துவமும் இங்கு இலவசமில்லை; கடன்பட்டுக் கஷ்டப்பட்டுப் படித்து வந்த செவிலியர்க்கும் நியாயமான சம்பளமில்லை. எனவேதான் செவிலியரின் கோரிக்கைகள் செவிட்டுக் காதில் ஊதிய சங்காகிறது!எடப்பாடி பழனிச்சாமி அரசால் தொடர்ந்து அவர்களை ஏமாற்ற முடிகிறது.
செவிலியர்களின் கோரிக்கை
செவிலியர்களை டி.எம்.எஸ் வளாகத்திற்குள் சிறை வைத்துச் சித்திரவதை செய்வதை வன்மையாகக் கண்டிப்பதுடன், அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.