கடலையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கிறதா பாஜக அரசு?.. வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு!
மோடி தலைமையிலான பாஜக அரசின் நாசகார ரகசியத் திட்டம் அம்பலமாகி இருப்பதாக தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : கடலையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க பாஜக அரசு துடிப்பது வெட்டவெளிச்சமாகிறது என்றும் இந்திய கடற்படையே தமிழக மீனவர் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதற்கு வேறு என்ன பொருள்? என்று தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான இந்திய கடற்படையின் தாக்குதல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : 1983ஆம் ஆண்டிலிருந்து தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து தாக்கி வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு டீசல் மற்றும் ஆயுதம் கொண்டுசெல்கிறார்கள், எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கிறார்கள் என்றெல்லாம் காரணம் சொல்லியே சுமார் 800 பேரை சுட்டுக் கொன்றது. வலைகளை அழித்தது. படகுகளைப் பறித்தது.
2009ல் விடுதலைப் புலிகள் உட்பட ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த பின்னும் இன்றுவரை தாக்குதல் நிற்கவில்லை.
தொடரும் இந்தத் தாக்குதலுக்கு இலங்கை அரசு மட்டும் காரணம் இல்லை, இந்திய அரசும்தான் காரணம் என்பது, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானதில்லை என மோடி அரசு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததிலிருந்தே தெரியவந்தது.
தாக்குதல்கள் நிற்கவில்லை
ஆனால் அதை மறைக்க, இருநாட்டு மீனவர் கூடிப் பேச்சு, இலங்கை அரசுடன் பேச்சு, அப்படி இப்படி என்றெல்லாம் நாடகமாடியது மோடி அரசு.
அதேநேரம் "எல்லை தாண்டி வந்தால் சுடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்றும் பேசினர் இலங்கை அமைச்சர்கள். இதை மோடி அரசு கண்டித்ததே இல்லை. அதனால் தமிழக மீனவர் தாக்கப்படுவதும் நிற்கவில்லை.
தொழிலை கைவிடச் செய்யவா?
இந்தத் தாக்குதல் காரணமாக கடல்தொழிலே செய்ய முடியாத நிலை, தாக்குதலைக் கண்டித்து அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுவதாலும் பெரும்பாலான நாட்கள் கடற்தொழிலை செய்ய முடியாத நிலை. ஆனால் கடற்தொழிலையே கைவிடச் செய்வதற்கான நிலையை ஏற்படுத்தவே இந்தத் தாக்குதல் என்பதுதான் கடைசியாகத் தெரியவந்திருக்கும் உண்மை.
இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு
அதன் அடிப்படையிலேயே இந்திய கடற்படையே இன்று தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை நோக்கி இந்தியக் கடற்படைப் படகு சீறிப் பாய்ந்து வந்திருக்கிறது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் தங்கள் வலைகளை அப்படியே விட்டுவிட்டு அவசர அவசரமாக கரைக்குத் திரும்பியிருக்கின்றனர்.
சிங்கள கடற்படை போலவே
ஆனால் இந்தியக் கடற்படையினர் அவர்கள் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கைகளை மேலே தூக்கியபின் எந்தப் படையினரும் சுடுவதில்லை என்பதுதான் சர்வதேச நியதி. இதற்கு உலகில் ஒரே விதிவிலக்கு சிங்களப் படையினர்தான். அதே சிங்களப் படையினரைப் போலவே இந்தியக் கடற்படையினரும் இன்று நடந்துகொண்டுள்ளனர்.
மீனவர்கள் புகார்
வலைகளைப் போட்டுவிட்டு, மீன்பிடிப்பதையும் நிறுத்திவிட்டு சரணடையும் விதத்தில் கரை திரும்பிய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் பிச்சை என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார். ஒரு படகையும் அதில் இருந்து மீனவர்களையும் கடற்படையினர் பிடித்து வைத்து மீனவர்களைக் கொடூரமாகத் தாக்குவதாக கரைக்குத் திரும்பிய மீனவர் இருதயம் என்பவர் சொன்னார்.
மோடியின் திட்டம் அம்பலம்
குண்டடி பட்டு ரத்தம் சொட்டியபடி இருந்த பிச்சையைத் தாங்கியபடியே இந்தச் செய்தியைச் சொன்னார் அவர். இலங்கை கடற்படையின் தாக்குதலினின்றும் இதுவரை ஒரு முறைகூட தமிழக மீனவரைப் பாதுகாத்ததில்லை இந்தியக் கடற்படை. இது ஏன் என்பதற்கான விடை இன்று கிடைத்திருக்கிறது, சொந்த நாட்டு மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் ஏற்கனவே கார்ப்பரேட்டுகளுக்காகவே மோடி ஆட்சி நடத்துவதை, அவர் எடுத்த நடவடிக்கைகளே சொல்வதாக இருக்கின்றன.
என்ன தான் அர்த்தம்?
இப்போது கடலையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கவே செயற்கையாக மீனவர் பிரச்சனையை நீட்டித்து வருகிறார் என்பது புலனாகிறது. இல்லை என்றால் இந்திய கடற்படையே தமிழக மீனவரை சுட்டிருப்பதற்கு என்னதான் பொருள்? இதற்கான பதிலை தமிழக முதல்வர் பழனிச்சாமியிடமிருந்தும் எதிர்பார்க்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.