சொத்தை விற்கவா உங்களை ஆட்சியில் உட்கார வைத்தோம்.. மோடி அரசுக்கு வேல்முருகன் கொட்டு
நெய்வேலி என்எல்சி பங்குகளை விற்க மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : நெய்வேலி என்எல்சியின் 15 சதவீதப் பங்குகளை தனியார் துறைக்கு விற்கும் முடிவை மோடி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் (என்எல்சி) 15 சதவீதப் பங்குகளை மோடியின் மத்திய பாஜக அரசு விற்கப் போவதாக அறிவித்திருக்கிறது. 2017-18ஆம் ஆண்டில் அரசின் வருவாய் ரூ1.10 லட்சம் கோடி அளவுக்குக் குறையும் என கணக்கிட்டு, அதை ஈடுகட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்று முடிவு செய்திருக்கிறது மோடி அரசு.
அந்த வகையில் என்எல்சியின் 15 சதவீதப் பங்குகளை ரூ.2500 கோடிக்கு விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.
என்எல்சியின் பங்குகளில் 89.32 விழுக்காடு மத்திய அரசிடமும், 4.06 விழுக்காடு வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமும், 3.91 விழுக்காடு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடமும், 0.96 விழுக்காடு காப்பீட்டு நிறுவனங்களிடமும் உள்ளன.
தவறான முடிவு
"மத்திய அரசிடம் 75 விழுக்காட்டுக்கும் அதிகமான பொதுத்துறை நிறுவனப் பங்குகள் இருக்கக் கூடாது" என்கிற கொள்கை முடிவின்படியே என்எல்சியின் 15 விழுக்காடு பங்குகளை விற்கப் போவதாகக் கூறுகிறது மோடி அரசு. இதில் நியாயமே இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
காங்கிரஸ் ஆட்சியின் போது
முன்பு 2013ல் காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐமுகூ-2 அரசு என்எல்சியின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய இருந்தது. அதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளுமே கடுமையாக எதிர்க்க; தமிழக அரசே அந்தப் பங்குகளை வாங்கி, பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்தது.
வளர்ச்சியை பெருக்குவதே நியாயம்
தமிழக அரசு அந்தப் பங்குகளை வாங்கியதன் மூலம் அது மக்களுக்குப் பொதுவான சொத்து என்பது மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், மக்கள் சொத்தை தனியார் நிறுவனங்களுக்கு விற்கக்கூடாது; அந்தச் சொத்துக்குத் தொடர்புடைய மக்களையும் பங்குதாரர்களாக அங்கீகரித்து நிறுவனத்தின் வளர்ச்சியைப் பெருக்குவதே நியாயமாக இருக்கும்.
என்ன ஆனது உறுதி?
1956ல் என்எல்சி தொடங்கப்பட்டது. அதற்கான நிலக்கரி வளம் நிறைந்த நிலங்களை அங்குள்ள 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள்தான் அளித்தார்கள். அவர்களின் வீட்டுமனை மற்றும் விளைநிலங்களில் செயல்பட்டுத்தான் என்எல்சி இன்று ஆண்டுதோறும் ரூ.2500 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டி வருகிறது.
ஆனால் அப்படி நிலம் வழங்கியவர்களுக்கு நிலத்திற்கான இழப்பீடு,வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என அளித்த வாக்குறுதியை இன்றுவரை சரிவர நிறைவேற்றவில்லை என்எல்சி.
நிலம் வழங்கிய மக்களின் ஒப்புதல்
இதனால் நிலம் கொடுத்தவர்களை என்எல்சியின் பங்குதாரர்களாக ஆக்கிவிடுவதுதான் இதற்கான ஒரே தீர்வு என்று சொல்லி, அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. எனவே என்எல்சியின் பங்குகளை விற்பது அல்லது கைமாற்றுவது போன்ற எந்த முடிவையும் அதற்கு நிலம் வழங்கிய மக்களின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கக்கூடாது என்ற நியாயத்தையும் வலியுறுத்தி வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
எச்சரிக்கை
இதே நிலையில்தான் என்எல்சியின் ஒரு சதவீதப் பங்கைக்கூட தனியார் துறைக்கு விற்கக்கூடாது என எச்சரிக்கையே செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.நாட்டின் சொத்துக்களைக் கட்டிக்காக்க வாக்களித்தோமே தவிர,அவற்றை விற்பதற்கு அல்ல! அப்படி சொத்துக்களை விற்றுத்தான் சாப்பிட வேண்டும் என்றால்,இங்கு அரசு என்பதே இருந்து பயன் என்ன?
ஆட்சியை விட்டு விலகுங்கள்
கையாலாகாத ஆட்சியாளர்கள் விலகிக் கொள்ள வேண்டுமே தவிர,என்எல்சி உள்பட மக்கள் சொத்துக்களை விற்க முயல்வது அறிவார்ந்த செயலல்ல!
இத்தகைய செயல்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன் என்எல்சியின் 15 சதவீதப் பங்குகளை தனியார் துறைக்கு விற்கும் மோடி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது.