தூத்துக்குடி விமான நிலையத்தில் வேல்முருகன், 10 தவாக நிர்வாகிகள் கைது!
தூத்துக்குடி: தூத்துக்குடி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் மக்களின் எழுச்சி போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.
எனினும் இறந்தவர்களின் குடும்பங்களின் ஆறுதல் சொல்வதற்காகவும், காயம் அடைந்தவர்களை நேரில் சந்திப்பதற்காகவும் மு.க.ஸ்டாலின், வைகோ, முத்தரசன், திருநாவுக்கரசர், திருமாவளவன், கமல்ஹாசன், ஜி.கே.வாசன், டி.ராஜேந்தர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் தூத்துக்குடி சென்று வந்தனர். முன்னதாக, தலைவர்கள் திருமாவளவனும், திருநாவுக்கரசரும் தூத்துக்குடி செல்லும்முன் சென்னை விமான நிலையத்தில்1 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது. ஆனால் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி இவர்கள் அனைவர் மீதும் 143, 188 மற்றும் 153(ஏ) பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்திக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சென்றனர். ஆனால் விமான நிலையம் இறங்கிய உடனேயே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி இல்லை தெரிவித்தனர். அத்துடன், தடையை மீறி செயல்பட்டதாக கூறி வேல்முருகன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.