ஈழப்போரின் போது ரஜினி என்ன செய்தார்? வேல்முருகன் ஆவேசம்
ரஜினி திரை நட்சத்திரமாகவே தொடரட்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
சென்னை: இன்று பச்சைத்தமிழன் என்று சொல்லும் ரஜினி ஈழப்போரின்போது என்ன செய்தார்? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாக அனலாக பரவி வருகிறது. இந்த அரசியல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னையில் கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார் ரஜினி.
இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைப் பாராட்டினார். மேலும் தமிழகத்தில் இன்றைய அரசியலில் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. இது மொத்தத்தையும் சரி செய்ய வேண்டும். அப்போதுதான் உருப்படும். அதற்கான நேரம் வரும் என்றும் கூறினார்.
ரஜினியின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி பேச்சு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறுகையில், தமிழக அரசியல் குறித்தோ, மக்களின் வாழ்வாதார பிரச்னை குறித்தோ ரஜினிக்கு புரிதல் கிடையாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் அரியாசனத்துக்காக கனவு காண்கிறார், அது பலிக்காது என்றும் கூறினார்.
மேலும், இன்று பச்சைத்தமிழன் என்று சொல்லும் ரஜினி ஈழப்போரின் போது என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பிய வேல்முருகன், இளைஞர்கள் ரஜினியை ஏற்கும் நிலையில் தற்போது இல்லை, அவர் திரை நட்சத்திரமாகவே தொடரட்டும் என்றார்.