தமிழ்-தமிழர்-தமிழ்நாடு என்கிற வரலாற்று அடையாளத்தை அழிப்பதுதான் பசுமை வழிச்சாலை.. வேல்முருகன்
தமிழரின் வரலாற்று அடையாளத்தை பசுமை வழிச்சாலை அழிப்பதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழ்-தமிழர்-தமிழ்நாடு என்கிற வரலாற்று அடையாளங்களை அழித்து, பசுமை வழிச்சாலையை அமைக்க பிரதமர் மோடி துடிப்பதாக தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பிரதமர் மோடி, நாட்டை மாநில அரசுகளின் கூட்டமைப்பாகப் பார்க்காமல் விருப்பப்படி ஒரே சந்தையாக்க பார்க்கிறார் என்றும், அதனால்தான் ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் என்கிற வழியில் நாட்டை செலுத்த முனைவதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அந்த அறிக்கையில் வேல்முருகன் மேலும் தெரிவித்துள்ளதாவது-
சேலம்-சென்னை(படப்பை) எட்டு வழிச்சாலைக்கான எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. அதே சமயம் எதிர்ப்பவர்கள் மீதான அடக்குமுறையும் நாளுக்கு நாள் வலுத்துவருவதுடன், மிக மோசமானதாகவும் அது மாறிவருகிறது. ஐந்து மாவட்டங்களின் ஊடாக இந்த எட்டு வழிச் சாலை செல்லும் பகுதியெங்கும் போலீஸ் தலைகளே காணப்படுகின்றன. இது ஏதோ படையெடுப்பு நடத்த குவிக்கப்பட்டது போல் இருக்கிறது. மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தாதது மட்டுமல்ல; அவர்களுக்குத் தெரிவிக்காமலேயே அவர்களின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அதாவது நிலத்தை அளந்து கல் பதிக்கப்படுகிறது. இதை மக்கள் தடுப்பார்கள் என்றுதான் அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டிருக்கிறது.
யாரையும் விட்டுவைப்பதில்லை
தடுக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கும், அதற்கும் அடங்காவிட்டால் செந்தூக்காய்த் தூக்கி போலீஸ் வேனுக்குள் திணிப்பதற்கும்தான் இந்த போலீஸ் குவிப்பு! சாலை வரும் இடங்களில் இப்படியென்றால், வெளியே சாலைக்கு எதிராகப் பேசுபவர்கள், சமூக வலைத்தளங்களில் சாலைக்கு எதிராகப் பதிவிடுபவர்கள், சாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள், துண்டு பிரசுரம் விநியோகிப்பவர்கள் மற்றும் வைத்திருப்பவர்கள் என்று யாரையும் விட்டுவைப்பதில்லை. எல்லோரையுமே பிடித்து கைது செய்து, கடுமையான பல பிரிவுகளில் வழக்குப் போட்டு அவர்களை உள்ளே தள்ளுவது நடந்துகொண்டிருக்கிறது.
தொடரும் கைது நடவடிக்கை
அப்படித்தான் சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார்; பிறகு திரைப்பட நடிகர் மன்சூரலிகான், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம், திராவிடர் விடுதலைக் கழகம், பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மற்றும் விவசாயிகள் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். எட்டு வழிச் சாலைக்கு எதிரான துண்டு பிரசுரம் வைத்திருந்ததாக இவர்கள் அமர்ந்திருந்த வேனையும் பறிமுதல் செய்தனர்.
கருத்து தெரிவிப்பது குற்றமா?
நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரனைக் கைது செய்திருக்கின்றனர். எட்டு வழிச் சாலைக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. இதற்காக சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் சென்னை வந்து மதுரவாயலில் வசீகரனின் வீட்டில் வைத்து அவரைக் கைது செய்து சேலத்துக்குக் கொண்டுசென்றனர். எப்படியிருக்கிறது, சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பது குற்றமாம்.
எங்கும் நடைபெறாத விபரீதம்
செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் இடைவெளியின்றி இருபத்திநான்கு மணிநேரமும் எட்டு வழிச் சாலைக்கு எதிரான கருத்துக்களை பொதுமக்கள், கல்வியாளர்கள், சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று அனைத்துத் தரப்பினரும்தான் கூறிவருகின்றனர்; அவர்களையோ அந்த ஊடகங்களையோ என்ன செய்ய முடியும் மோடியால், எடப்பாடியால்? ஆனால் குறிப்பாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர், ஆம் ஆத்மி கட்சியினர், அப்பாவி விவசாயிகள் என்பதாகப் பார்த்து கைது செய்கின்றனர். இது இன்றைய உலகில் எந்த நாட்டிலும் நடைபெறாத விபரீதம்!
நிலைமை தலைகீழாகும்
அரசமைப்புச் சட்டம் வழங்கும் எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை என்பவற்றுக்கு எதிரான கொடூரம்! மக்களாட்சி ஜனநாயகம் என்று சொல்லும் நாட்டில் இந்தக் கொடுமைகள் நடக்கிறதென்றால் ஆட்சியிலிருப்பவர்கள் கொடுங்கோலர்களன்றி வேறு யார்? இப்படியே எப்போதும் காலம் போய்க்கொண்டிருக்காது; இதை உணராமல் வெறியாட்டம் போட்டால் நாளை நிச்சயம் நிலைமை தலைகீழாக மாறாமல் போகாது. இதை எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! அரசமைப்புச் சட்டம், கூட்டாட்சித் தத்துவம், மக்களாட்சி ஜனநாயகம் இவற்றைத் தவிர்க்கிறார் மோடி; இவரது அடிப்பொடியாக இருக்கும் எடப்பாடியும் அவர் ஆட்டுவித்தபடி ஆடுகிறார்.
நாடு என்ன சந்தையா?
நாட்டை மாநில அரசுகளின் கூட்டமைப்பாகப் பார்க்காமல் ஒரே சந்தையாக்கப் பார்க்கிறார். அதனால்தான் ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் என்கிற வழியில் நாட்டைச் செலுத்த முனைகிறார். அதற்காக மாநிலங்களை ஒழித்துக்கட்டவும் தயாராக இருக்கிறார். அந்த வகையில்தான் தமிழ்-தமிழர்-தமிழ்நாடு என்கின்ற வரலாற்று அடையாளத்தை அழித்திடத் துடிக்கிறார். மோடியிசம் என்பது இதுதான்! மோடியிசத்தின் ஒரு செயப்பாட்டு வினைதான் சேலம்-சென்னை(படப்பை) எட்டு வழிச் சாலை! இதில் மோடி இடும் கட்டளையைத் செய்துமுடிக்கத் துடிக்கிறார் எடப்பாடி!
வசீகரனை விடுவிக்க வேண்டும்
அதனால் சாலைக்கு எதிராய்க் கருத்துரைப்போரையெல்லாம் விட்டுவைக்காத அவர், நேற்று ஆம் ஆத்மி வசீகரனையும் கைது செய்திருக்கிறார்! இந்த வெட்கக்கேட்டைக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் மற்றும் எட்டு வழிச் சாலைக்கு எதிரான துண்டு பிரசுரம் வைத்திருந்ததாக கைது செய்துள்ள தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த 19 பேரையும் மற்றும் எட்டு வழிச் சாலைக்கு எதிராக போராடிய அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
இவ்வாறு வேல்முருகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.