ஹஜ் மானிய ரத்து மூலம் பாஜகவின் பாசிஸ முகம் வெளிவந்திருக்கிறது: வேல்முருகன்
ஹஜ் மானிய ரத்து அறிவிப்பின் மூலம் பாஜகவின் பாசிஸ முகம் வெளிவந்து இருக்கிறது என்று வேல்முருகன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை: ஹஜ் மானியத்தை ரத்து செய்து இருப்பதன் மூலம் பாஜகவின் பாசிஸ அரசியல் முகம் வெளிவந்து இருக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குறிப்பிட்டு உள்ளார்.
மத்திய அரசு சார்பில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், இனி மேல் அந்த தொகை அவர்களின் கல்விக்கும் நல்வாழ்வுக்கும் செலவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின் படி என்று சொல்லி தவறான மத அரசியல் செய்கிறது பாஜக என்று எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
ஹஜ் மானியம் ரத்து
அந்த அறிக்கையில், முஸ்லிம்களின் மார்க்க கடமைகளில் ஒன்று, முடிந்தால் சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது செல்ல வேண்டியது. இதை ஹஜ் பயணம் என்பர். இதன்படி இந்தியாவிலிருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இதற்காக மத்திய அரசு கொடுத்துவரும் மானியத் தொகையை தான் இந்த ஆண்டு முதல் நிறுத்திக்கொள்வதாக மோடி அரசு அறிவித்திருக்கிறது.
தவறாக புரிந்துகொண்ட அரசு
இது தொடர்பாக 2012ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடியே இந்த முடிவுக்கு வந்திருப்பதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். 2012ல் உச்ச நீதிமன்றம், "பத்தாண்டுகளுக்குள் படிப்படியாக இந்த மானியத்தை நிறுத்திவிட வேண்டும்" என்றுதான் கூறியது. ஆனால் அதற்கு மாறாக மத்திய அரசு திடீரென இதனை நிறுத்தியுள்ளது. இது மோடி அரசின் தவறான நடவடிக்கைகளுள் ஒன்று.
நீதிபதி லோயா மரணம்
இப்படி திடீரென நிறுத்தியுள்ளதற்கு காரணம், மோடி அரசு மீது வந்திருக்கும் பயங்கரமான குற்றச்சாட்டுதான்; அதாவது அரசியல் சாசனத்தின் முதன்மை உறுப்பு அமைப்புகள் அனைத்தையும் தன்வயப்படுத்தி வருகிறார் மோடி; ரிசர்வ் வங்கியையும் தேர்தல் ஆணையத்தையும் ஏற்கனவே வளைத்துகொண்ட அவர், நீதித்துறையையும் வளைப்பது அம்பலமாகிறது. அதாவது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் பாஜக தலைவர் அமித் ஷா சம்பந்தப்பட்ட, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பாரபட்ச போக்கின் மீது குற்றம் சுமத்தினர். இதனை திசைதிருப்பி மூடிமறைக்கும் தந்திரமே இந்த ஹஜ் பயண மானிய ரத்து அறிவிப்பு.
ஏர் இந்தியா நிறுவனத்தின் கட்டணம்
அதேசமயம் ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு மானியம் அளிக்கிறது என்பதும் உண்மையல்ல. மானியம் இந்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குத்தான் போகிறது. எப்படியென்றால், ஹஜ் பயணிக்கான கட்டணம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். இதில் ஹஜ் பயணியின் உணவுச் செலவுக்காகத் தரப்படும் 34 ஆயிரம் போக மீதி இருப்பது ஒரு லட்சத்து 46 ஆயிரம். இதில் விமானக் கட்டணம், மக்கா-மதினாவில் தங்கும் கட்டணம் என மொத்த செலவு ஒரு லட்சத்து 20 ஆயிரம். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஒரு ஹஜ் பயணி மத்திய அரசுக்கு 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாகத்தான் செலுத்துகிறார்.
விமான கட்டணம் அதிகம்
ஏர் இந்தியாவில்தான் பயணப்பட வேண்டும் என விதிக்கப்பட்டிருப்பதால் இப்படி அதிக கட்டணம். மற்ற விமானங்களில் கட்டணம் குறைவு. ஆனால் அதற்கு அனுமதியில்லை. ஆக மானியம் என்பது, மற்ற விமானங்களைவிட அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட அரசின் ஏர் இந்தியா நிறுவனத்திற்கே தவிர முஸ்லிம்களுக்கல்ல என்பதுதான் உண்மை! இப்படி மோசடியாக முஸ்லிம்களை சுரண்டிவரும் அரசுதான் ஹஜ் பயண மானியத்தை முஸ்லிம்களுக்கு நிறுத்திவிட்டதாக அறிவிக்கிறது. ஆனால் அதேசமயம் வடக்கே கைலாஷ்நாத் யாத்திரை, மானசரோவர் யாத்திரை என்று அநேக யாத்திரைகளுக்கு பணம் வழங்கிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.
மானியம் ரத்து திரும்பபெற வேண்டும்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி இந்திய அரசைக் கேட்டுக்கொள்வதெல்லாம், ஏர் இந்தியா விமானத்தில்தான் ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தை விட்டொழித்து ஹாஜிகள் தங்கள் விருப்பப்படி மெக்கா செல்ல வழிவிட வேண்டும் என்பதுதான். ஹஜ் பயண மானியம் ரத்து போன்ற மோசடி அறிவிப்புகளைச் செய்வதன் மூலம் மோடி அரசு, மக்கள் பிரச்சனைகளை திசைதிருப்புவதையும் தன் பாசிஸ கொடுங்கோன்மையை மூடிமறைக்கப் பார்ப்பதையும் வன்மையாக கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று அந்த அறிக்கையில் வேல்முருகன் குறிப்பிட்டு உள்ளார்.