ஆவடி ஓ.சி.எஃப் நிறுவனத்தை மூடும் மத்திய அரசின் முடிவிற்கு வேல்முருகன் கடும் கண்டனம்
ஓ.சி.எஃப் நிறுவனத்தை மூடும் அரசின் முடிவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை : ஆவடியில் ராணுவ சீருடை மற்றும் போர்ப் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் ஓ.சி.எஃப் நிறுவனத்தை மூடும் மத்திய அரசின் முடிவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னையை அடுத்துள்ள ஆவடியில் இயங்கி வரும் ஓ.சி.எஃப் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் குறைந்த தொழில்நுட்பத்திலானவை என்று அறிவித்து அந்த தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.
இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
காமராஜரால் தொடங்கப்பட்ட ஓ.சி.எஃப்
அந்த அறிக்கையில், 1961நவம்பர் மாதம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் உருவாக்கப்பட்ட படைத்துறைத் தொழிற்சாலை ஆவடி ஓசிஎஃப் என்பது இந்திய ராணுவத்தினருக்கு, உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய அனைத்து தட்பவெப்பத்துக்கும் ஏற்ற உடைகளைத் தயாரிக்கும் ஆலை. சென்னை ஆவடியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைய தலைமுறையினர் கணிசமான அளவில் இதில் பணியாற்றுகிறார்கள். 2,121 தொழிலாளர்கள், அதில் 811 பேர் பெண்கள்.
தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
நாட்டில் மொத்தமுள்ள 5 ஓசிஎஃப் தொழிற்சாலைகளில் ஆவடி ஓசிஎஃப்பும் ஒன்று. மற்ற 4தொழிற்சாலைகளும் உத்தரப் பிரதேசத்தில் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் 650க்கும் மேற்பட்ட பாதுகாப்புத் தளவாட வகைகளை உற்பத்தி செய்துவருகின்றன. ஆனால் தற்போது அதில் சுமார் 250 வகைகள் குறைந்த தொழில்நுட்பத்தினாலானவை (Non-core items) என்று பாதுகாப்புத்துறை அறிவித்து பிரச்சனை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஆவடி ஓசிஎஃப் உள்ளிட்ட 5 தொழிற்சாலைகளிலும் இனி ராணுவச் சீருடை தயாரிக்க வேண்டாம்; அதைத் தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள்
அதோடு, ராணுவத்தினருக்குச் சீருடையாக வழங்குவதற்குப் பதில் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கி அதில் அவர்களே உடைகளைத் தைத்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அரசாணை 16.11.2017லேயே பிறப்பிக்கப்பட்டுவிட்டது. இந்த நடவடிக்கைகளால் தொழிலாளர்கள் அனைவருமே வேலையிழக்க வேண்டிவரும் என்பதோடு தொழிற்சாலையையும் மூட வேண்டிவரும்.
இப்போதே, மாற்றுப் பணி என்னும் பெயரில் தொழிலாளர்களை இடமாற்றம் செய்வதும் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.
இது தொழிலாளர்களின் நிம்மதியைக் கெடுத்திருக்கிறது.
கடந்த கால பிரச்னைகள்
தொழிலாளர்களைக் கலந்து பேசாமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பதைக் கண்டித்து, தொழிற்சங்கம் போராடி வருகிறது.
ஆனால் நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை; தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. இதுபோன்று கடந்த காலத்திலும் பிரச்சனை வந்திருக்கிறது. அப்போதெல்லாம், பாதுகாப்புத்துறை அமைச்சர்களாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜஸ்வந்த் சிங், பிரணாப் முகர்ஜி, ஏ.கே.ஆன்டனி வரைக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை அவர்கள் கடைப்பிடித்தார்கள். அதனால் பிரச்சனை தீர்ந்தது.
மோடி அரசின் திட்டமிட்ட சதி
"படைத்துறைப் பொருட்கள் உற்பத்தி தனியாரிடம் ஒப்படைக்கப்படாது; எதிகாலத்தில் புதிய தளவாடங்களையும் உற்பத்தி செய்ய படைத்துறை தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்; நாட்டின் சுயசார்பைக் கணக்கில் கொண்டு படைத்துறைத் தொழிற்சாலைகளைப் பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்" என்பதுதான் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உறுதிமொழி. ஆனால் மோடி அரசு வந்ததிலிருந்து நிலைமை மாறி, இன்று தொழிலாளர்களை வீட்டுக்கனுப்பும் நிலை உருவாகியிருக்கிறது.
தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது
தொழிலாளர்களும் இதை எதிர்த்துக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் கைகோர்க்கிறது. ஆவடி ஓசிஎஃப் உள்ளிட்ட படைத்துறை தொழிற்சாலைகளை மூடி, 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வீட்டுக்கனுப்பும் முடிவினை வன்மையாகக் கண்டிக்கிறோம். நியாயமற்ற அந்த முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும்; தொழிலாளர்களின் பணி மற்றும் பதவிகளுக்கு முழு பாதுகாப்பும் உத்தரவாதமும் தரவேண்டும் என்று அந்த அறிக்கையில் வேல்முருகன் குறிப்பிட்டு உள்ளார்.