தமிழகத்தில் கெயில் திட்டங்களை செயல்படுத்த பாஜக முயற்சிப்பதற்கு வேல்முருகன் கடும் கண்டனம்
தமிழகத்தில் கெயில் திட்டங்களை செயல்படுத்த முனையும் தமிழக பா.ஜ.க.,விற்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை : தமிழக விவசாயிகளால் எதிர்க்கப்படும் கெயில் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முனையும் மத்திய அரசுக்கும், தமிழக பா.ஜ.க.,விற்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை"
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளைநிலங்கள் வழியாக கர்நாடகாவின் பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயு கொண்டுசெல்லும் கெயில்-திட்டம், விவசாயிகளின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. 2011ல் ஜெயலலிதா அரசு பதவியேற்ற ஒருசில மாதங்களிலேயே இந்தப் பிரச்சனை எழுந்து, விவசாயிகளின் எதிர்ப்பையடுத்து, "விளைநிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்க அனுமதி இல்லை" என தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டு குழாய் பதிப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
கெயிலுக்கு எதிராகா மாநில அரசு
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற கெயில் நிறுவனம், "எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் பெட்ரோலியம் மற்றும் மினரல் பைப்லைன்ஸ் (நிலம் பயன்படுத்துதல்) சட்டத்தின் கீழ் வருகிறது. எனவே மாநில அரசு இதைத் தடை செய்ய முடியாது. 5,500 விவசாயிகளில் 7 பேர் மட்டுமே எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளனர். மேற்கொண்டு 10 சதவீதத்துக்கும் அதிகமாக இழப்பீடு தர தயாராக இருக்கிறோம்" என்று வாதிட்டது. தமிழக அரசு, குழாய்களை நெடுஞ்சாலை வழியாகக் கொண்டுசெல்வதில் அரசுக்கு ஆட்சேபணை இல்லை. விளைநிலங்கள் வழியாகச் செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தது.
பிரதமர் மோடியின் ஆர்வம்
இதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் திட்டத்தைத் தடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. நில மதிப்பீட்டை2016ம் ஆண்டிற்கான ஜனவரி 1ம் தேதியை சந்தை விலையில் தீர்மானித்து, ஏக்கருக்கு 10 சதவீதம் என்பதை 30 சதவீதமாகக் கணக்கிட்டு கூடுதல் இழப்பீடாக வழங்க வேண்டும் என 2016 பிப்ரவரியில் தீர்ப்பளித்தது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை செயல்படுத்துவதில் குறியாக உள்ளார்.
ஏழு பேர் கொண்ட குழு
கடந்த அக்டோபர் 6ம் தேதியன்று அவர் முன்னிலையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், ‘பெட்ரோலிய அமைச்சகம், கெயில் நிறுவனம், தமிழக அரசு மூவரும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தியாக வேண்டும். இது குறித்து தமிழக அரசு விவசாயிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்தவேண்டும்' என உத்தரவிட்டுள்ளார் மோடி. இதே உத்தரவு தமிழக பாஜகவுக்கும் இடப்பட்டிருக்கிறது. அதனால்தான் இத்திட்டம் குறித்து நேரடியாகவே விவசாயிகளிடம் பேசி, இழப்பீடு பெற்றுத்தர என்று 7 பேர்கொண்ட குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு பா.ஜ.க.
இழப்பீட்டுக்குழு உறுப்பினர்கள்
பா.ஜ.க.,வின் மாநில விவசாய அணித் தலைவர் பொன்.விஜயராகவனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட அந்தக் குழுவில், விவசாய அணி துணைத் தலைவர்கள் சிவகாமி பரமசிவம் மற்றும் ஜி.கே.நாகராஜ், விவசாய அணி பொதுச் செயலாளர்கள் வெங்கட் பிரபு மற்றும் கோவிந்தராஜ், ஓபிசி அணித் தலைவர் முன்னாள் எம்பி கார்வேந்தன், நாடாளுமன்றத் தொகுதி இணை பொறுப்பாளர் கே.வி.ராமநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மோசமான நடவடிக்கை
கடந்த 2ம் தேதியன்று இந்தக் குழுவை அறிவித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன், "இந்தக் குழு விவசாயிகளை நேரில் சந்தித்து இந்தத் திட்டத்தின் நன்மைகள் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லும்; உரிய இழப்பீட்டையும் அவர்களுக்குப் பெற்றுத் தரும்" என்றார். எரிவாயுத் திட்டத்தைப் பொறுத்தவரை அது கெயில், ஒ.என்.ஜி.சி, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷெல் என எதுவாக இருந்தாலும் விவசாய நிலத்தைப் பாழ்படுத்தக்கூடியதே; அப்படி பாழ்படுத்திவிட்டதால்தான் நெடுவாசல், கதிராமங்கலம், நன்னிலம் என்று தமிழகத்தில் அதைக் கொண்டுவந்த இடங்களிலெல்லாம் விவசாயிகளுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் சேர்ந்ததால் போராட்டம் வெடித்தது.
கைத்தடியாக மாநில அரசு
ஜெயலலிதா மறைந்த பிறகு, சட்டவிரோத பழனிச்சாமி அமைச்சரவையை அதன் பொருளியல் குற்றச் சார்பைப் பயன்படுத்தி பொம்மையாக தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டு, தமிழகத்தையே பாலைவனமாக்கும் நோக்கில், இத்தகைய நாசகார திட்டங்களாகப் பார்த்து திணித்துக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு. அதன் கைத்தடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர். இதை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இந்த கெயில் உள்பட விவசாயத்தை அழிக்கக்கூடிய அனைத்து எரிவாயுத் திட்டங்களையுமே கைவிடுமாறு மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறது.
மத்திய அரசின் கயமைத்தனம்
ஏற்கனவே நிறுத்தப்பட்ட கெயில் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிட தமிழிசை அவர்கள் குழு அமைத்திருப்பது, ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து ஆளையே போட்டுத் தாக்கப் பார்க்கும் கயமைத்தனமாகும். மக்கள் கவனம் புயல்-மழையிலும் இடைத்தேர்தலிலும் இருக்கும்போது, இதுதான் சமயம் என்று விளைநிலத்தில் கெயில் குழாய் பதிக்கப் பார்ப்பது தமிழர்களின் முதுகில் குத்தும் செயலாகும். இத்தகைய மக்கள் விரோதப் போக்கு எதிர்வினைக்குள்ளாகும் முன் அதனை விட்டொழிக்குமாறு பாஜகவையும், அ.தி.மு.க.,வையுமே கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு வேல்முருகன் அந்த அறிகையில் தெரிவித்துள்ளார்.