எல்லோரும் மேய புறம்போக்கு நிலமா தமிழகம்? வெளிமாநிலத்தவருக்கும் வேலை விவகாரத்தில் வேல்முருகன் காட்டம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இந்தியா முழுவதும் உள்ளவர்கள், வெளிநாட்டவர் மற்றும் அகதிகளும் வேலைக்காக விண்ணப்பிக்கலாம் என விதிமுறை திருத்தப்பட்டிருப்பதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்
Recommended Video
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இந்தியா முழுவதும் உள்ளவர்கள், வெளிநாட்டவர் மற்றும் அகதிகளும் வேலைக்காக விண்ணப்பிக்கலாம் என விதிமுறை திருத்தப்பட்டிருப்பதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), 9,351 பேரைத் தேர்வு செய்ய, 2018 பிப்ரவரியில் தேர்வு நடத்த அறிவிப்பு செய்தது.இந்தத் தேர்வினை எழுத, 07.11.2016 அன்று திருத்தப்பட்ட தேர்வாணைய விதிமுறைகளின்படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வெளி நபர்கள் கைப்பற்றலாம்
07.11.2016ன் அந்த திருத்தம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதுமுள்ளவர்கள், நேபாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டவர் மற்றும் பாகிஸ்தான், திபெத் அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்கிறது. அதோடு இவர்களுக்குத் தமிழ் தெரியாவிட்டால், இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் எனவும் சலுகை அளிக்கிறது.
இதன் பொருள், பொதுப்பட்டியலில் உள்ள 31 விழுக்காட்டுப் பணியிடங்களை வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் கைப்பற்றிக் கொள்ளலாம் என்பதே.
வெளிமாநிலத்தவருக்கும் இனி பங்கு
இது போதாதென்று, இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் சேர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இடஒதுக்கீட்டு சாதிகள் பட்டியலில் தமிழ்நாட்டிலுள்ள அட்டவணை சாதிகளாக ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில சாதிகளும்; பிற்படுத்தப்பட்ட சாதிகளாக கவுடா, ஹெக்டே, லிங்காயத்து போன்ற கர்நாடக மாநில சாதிகளும்; மராட்டா என்ற மகாராஷ்டிர மாநில சாதியும், ஜெட்டி என்ற குஜராத் மாநில சாதியும், கேரள முதலி என்ற கேரள மாநில சாதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வெளிமாநிலத்தவருக்கும் இனி பங்கு போகும்.
புறம்போக்கு நிலமாகும் தமிழகம்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 69 விழுக்காடு இடஒதுக்கீடு இருந்தும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கணிசமானவர்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவரும் வந்து நமது இடங்களை பறித்துக் கொள்ள அனுமதியளிக்கிறது தமிழக அரசு.அதாவது கண்டதுகளும் வந்து மேயும் புறம்போக்கு நிலமாகவே தமிழ்நாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது பழனிச்சாமி அரசு!பதவியை விட்டுப் போவதற்குள் பலாபலன்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவில்தான் பொறுப்பற்ற இத்தகைய நடவடிக்கைகளை அறங்கேற்றுவதாகத் தெரிகிறது.
விதிமுறைகளை திரும்பப்பெறவேண்டும்
இதை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அரசை வலியுறுத்துகிறது: 07.11.2016ல் திருத்தப்பட்ட விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும்.
2018 பிப்ரவரியில் தேர்வு நடத்த வெளியிட்டுள்ள அறிவிப்பினையும் திரும்பப் பெற வேண்டும். கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களைப் போல், தமிழ்நாட்டிலும் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட சட்டம் இயற்ற வேண்டும்;
போராட்டம் நடத்தப்படும்
அதன்படி அரசுப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க வேண்டும்; தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும் 90 விழுக்காடு பணிகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து விரைவில் மிகப்பெரிய போராட்டத்தையும் முன்னெடுக்க இருக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.