நா. முத்துக்குமாரின் மரணம்.. தமிழ்ச் சமூகத்திற்குப் பெருந்துயரம்... வேல்முருகன் வேதனை
சென்னை: பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணம், தமிழ்ச் சமூகத்திற்குப் பெருந்துயரமாக அமைந்து விட்டது என்று தமிழக வாழ்வுரி்மைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நா. முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள வேல்முருகன், பாடலாசிரியராக மட்டுமல்லாமல், இனமான உணர்வுமிக்கவராகவும் வாழ்ந்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
பண்ருட்டி வேல்முருகன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
புடம் போட்ட வைரம்
தமிழின உணர்வாளர் பாடலாசிரியர் தம்பி நா. முத்துக்குமார் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மார்ந்த இறுதி வணக்கம்! திரைப்படப் பாடலாசிரியாக அண்ணன் அறிவுமதி அவர்களின் 73, அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர் எனும் தமிழ் பட்டறையில் தீட்டப்பட்டு புடம்போட்ட வைரமாக ஜொலித்த தம்பி நா. முத்துக்குமார் அவர்களின் திடீர் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனேன்.
அன்புத் தம்பி
இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள்... இன்னமும் வெளிவராத நூற்றுக்கணக்கான படங்களுக்கான பாடல்கள்... அத்தனையிலும் அன்னைத் தமிழின் அழகு வார்த்தைகளை அள்ளித் தெளித்தவர் தம்பி நா. முத்துக்குமார்...
இனமான உணர்வுமிக்கவர்
ஒரு பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் இனமான உணர்வுமிக்கவராக தமிழர் வாழ்வுரிமைக்கான களங்களிலும் குரல் கொடுத்தவராக திகழ்ந்த தம்பி நா. முத்துக்குமார் இன்று உடல்நலக் குறைவால் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பது தமிழ் சமூகத்துக்கு பெருந்துயரம்.
இறுதி வணக்கம்
அன்புத் தம்பி நா. முத்துக்குமார் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் செம்மார்ந்த இறுதி வணக்கத்தைச் செலுத்தி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.