யாழ். மாணவர்கள் கொலை: சென்னை இலங்கை தூதரகம் நாளை தமிழ் அமைப்புகளால் முற்றுகை- வேல்முருகன்
யாழ்ப்பான மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இலங்கை தூதரகம் முன் தமிழ் அமைப்புகள் இணைந்து போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: யாழ்ப்பான மாணவர்கள் சுட்டுக் கொன்ற அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து இலங்கை தூதரகம் முன் தமிழ் அமைப்புகள் நடத்தும் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கும் என்று அதன் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் 2 பேரை சிங்கள காவல்துறை சுட்டுப் படுகொலை செய்த பேரினவாத அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழ் அமைப்புகள் இணைந்து கூட்டாக நாளை புதன்கிழமையன்று காலை 11.00 மணியளவில் முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்த உள்ளன. இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழக மாணவர்கள் 2 பேரை சிங்கள காவல்துறையினர் சுட்டுப் படுகொலை செய்த நிகழ்வு உலகத் தமிழினத்தை பேரதிர்ச்சிக்கும் பெரும் கொந்தளிப்புக்கும் உள்ளாக்கியுள்ளது. இந்த படுபாதக செயலை உலகத் தமிழர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
தமிழீழத்தின் கலாசார தலைநகரான யாழ்ப்பாணத்தில் மாணவர்களும் பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கில் நேற்று ஒன்றுதிரண்டு நீதி கோரி மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று தமிழீழத்தின் வடக்கு பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார் மற்றும் வவுனியாவில் முழு அடைப்புப் போராட்டத்தின் மூலம் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழீழ விடுதலைக்கான குரல் ஓய்ந்து போய்விடவில்லை என்பதை யாழ்ப்பாணத் தமிழர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில் அவர்களை அச்சுறுத்தும் வகையில் இத்தகைய அடக்குமுறைகளை சிங்கள காவல்துறை ஏவிவிடுகிறது. அண்மையில் தமிழீழத் தலைநகரான திருகோணமலையில் தமிழர்களை அச்சுறுத்தும் ராணுவ பயிற்சியை நடத்தியது.
இப்போது யாழ்ப்பாணத்தில் அப்பாவி மாணவர்களை நரவேட்டையாடியுள்ளது சிங்களம். தொடரும் சிங்கள இனவெறி ஒடுக்குமுறையில் இருந்து தமிழீழ தேசம் விடுதலை பெற வேண்டியதின் அவசியத்தை இத்தகைய இனவெறிப் படுகொலைகள் உறுதி செய்கின்றன.
சிங்களத்தின் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களுக்கும் தாய்த் தமிழகம் உறுதுணையாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நாளை புதன்கிழமையன்று முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளன.
இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்று நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், படைப்பாளிகள் அனைவரும் இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் அணி திரண்டு வர வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.
தமிழினத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இப்போராட்டத்தி ஜாதி, மத, கட்சிகளைக் கடந்து தமிழராய் திரண்டு வாரீர் என அன்புடன் அழைக்கிறேன்.
தமிழீழத் தமிழர்களை அச்சுறுத்தி அரச பயங்கரவாதத்தை ஏவிவிடும் சிங்கள பேரினவாத அரசை இந்திய மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.