புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன்.. ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் அமைதியாக நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இன்னும் பலர் மோசமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட, போலீஸ் தாக்கிய மக்களை நேரில் சந்திக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி சென்றார். அங்கு அவர் போலீசால் கைது செய்யப்பட்டு மறுநாள் திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து வேல்முருகன், சென்னை புழல் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். கடந்த நான்கு நாட்களாக அவர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தண்ணீர் கூட குடிக்காமல் அவர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
இதனால் அவர் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இன்று காலை மதிமுக பொதுச்செயலர் வைகோ அவரை நேரில் சந்தித்து, உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் வாங்கும்படி கூறினார். வைகோ கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் தனது நான்கு நாள் போராட்டத்தை வாபஸ் வாங்கினார்.
ஆனாலும் நான்கு நாள் உண்ணாவிரத போராட்டம் இருந்த காரணத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இன்று உடல்நிலை மோசமான வேல்முருகன், தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்ணாவிரதம் காரணமாக உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.