வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்.. நாகர்கோவில் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட ஹைகோர்ட் உத்தரவு
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு இரண்டு வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சிலர் தாக்கினர். இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை வேல்முருகன் தலைமையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் 10ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து நெய்வேலி அனல்மின் நிலையம் போலீசார் வேல்முருகன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த இரு வழக்குகளில் வேல்முருகன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் அவர் ஜாமீன் கேட்டு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் கடலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வேல்முருகன் ஜாமீன் கேட்டு மனுக்கள் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வேல்முருகன் தரப்பில் வழக்கறிஞர் குமரேசன் ஆஜரானார்.
காவல்துறை வேண்டும் என்றே வேல்முருகனை கைது செய்து உள்ளதாகவும் ஏற்கனவே இதே வழக்குகளில் விசாரணை செய்து விடுவித்த பிறகு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வாதிட்டார்.
வாதங்களை கேட்ட நீதிபதி, 2 வழக்குகளிலும் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாகவும், மறு உத்தரவு வரும் வரை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தங்கியிருந்து அங்குள்ள கோட்டார் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு கையெழுத்திடவேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.