வைகோவின் கோரிக்கையை ஏற்பு.. 4 நாட்களுக்கு பின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற வேல்முருகன்
தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து புழல் சிறையில் வேல்முருகன் நான்காவது நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
Recommended Video
சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னை புழல் சிறையில் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை, வைகோவின் கோரிக்கையை ஏற்று வாபஸ் வாங்கினார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறுதல் சொல்லச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கிய வழக்கில், அவரைக் கைதுசெய்த விழுப்புரம் காவல்துறை அவரை புழல் சிறையில் அடைத்துள்ளது. அங்கு வேல்முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் , மாவட்ட ஆட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும், பலியானோரின் விபரங்களை வெளியிட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுத்தி அவர் நான்காவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.
இதற்கிடையே வேல்முருகனை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சிறையில் சென்று சந்தித்தார். அப்போது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு அவர் வேல்முருகனை கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், வைகோவின் கோரிக்கையை ஏற்று வேல்முருகன் உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கினார். மேலும் அவரோடு உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த 21 கைதிகளும் தங்களது போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளனர்.