ஆகம விதிகளின்படியே அர்ச்சககர்கள் நியமனம் என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரான தீர்ப்பு... வேல்முருகன்
சென்னை: இந்து கோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சககர்கள் நியமனம் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதியை குழிதோண்டி புதைப்பதாக உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்து மதத்தில் ஒரு பிரிவினருக்கு மட்டும்தான் அர்ச்சகராகும் தகுதி இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு இனப்பாகுபாட்டை அங்கீகரிப்பதாகும். இது சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரானது. இந்து மதத்தின் பிற பிரிவினரின் அடிப்படை மனித உரிமைகளை பறிப்பதாகும்.
தந்தை பெரியார் அவர்கள் 1970ஆம் ஆண்டு கோவில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 1970ஆம் ஆண்டு டிசம்பர் 2-ல் தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என வாரிசு உரிமை அடிப்படையிலான பணி நியமனத்தை ஒழித்து இந்து அறநிலைய சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது.
ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது கூட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வானது, தமிழக அரசின் சட்ட திருத்தத்துக்கு தடை விதிக்கவில்லை; அதே நேரத்தில் "ஆகம விதிப்படிகள்தான் அர்ச்சகர்களை நியமிக்க முடியும்" என்ற முட்டுக்கட்டையையும் போட்டது. இதன் பின்னர் 2006-ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது .
தற்போது, 1972ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலேயே "ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க முடியும்" என மீண்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . இதன் மூலம் உச்சநீதிமன்றமும், பிறப்பின் அடிப்படையில்- ஜாதியின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை தொடர்ந்து அங்கீகரிக்கும் வகையிலான சமூக அநீதியை நியாயப்படுத்துகிற ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இது சமூக நீதிக்கு சாவுமணி அடிப்பதாகும். இந்துமத ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துகிற அரசியல் சாசனத்தின் 25,26 வது பிரிவு இருக்கிற வரை சமூகத்தில் ஜாதி, தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பது இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வகை செய்கிற வகையிலும், 2002ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்தும் அரசியல் சாசனத்தின் 17வது பிரிவின் கீழான உரிமையை நிலைநாட்டிடும் வகையிலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்து தமிழகம், சமூக நீதியின் தாயகம் என்பதை தமிழக முதல்வர் அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.