பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று வேல்முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி பணியாளர் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த மாதம் வெளியான பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முடிவுகளில் வெளிமாநிலத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்ததை பல்வேறு இயக்கங்கள் கண்டித்தன. இதனால் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவித்தும், மீண்டும் குளறுபடிகளைக் கலைந்து மறுதேர்வு நடத்தக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் 16ம் தேதியன்று நடந்த, 1058 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வின் முடிவுகள் கடந்த நவம்பர் 7ம் தேதியன்று வெளியாயின. அதில் தேர்வானவர்களின் பெயர்கள் இல்லாமல், பதிவு எண், பிரிவு, மதிப்பெண் ஆகியவையே வெளியாகியிருந்தன.
86% கைப்பற்றிய வெளிமாநிலத்தவர்கள்
இதனால் சந்தேகம் ஏற்பட்டு, பெயர்களைத் தேடிப் பார்த்ததில், குப்தா, ரெட்டி, சர்மா, நாயர், சிங், பாண்டே போன்ற பின்ஒட்டுகளுடன் கூடிய வெளிமாநிலப் பெயர்கள் பல தென்பட்டன. அந்த வெளிமாநிலத்தவர்கள், இடஒதுக்கீட்டுப் பொதுப்பட்டியலின் கீழ் தேர்வாகியிருந்தனர்; 86 விழுக்காடு இடங்களை அவர்கள் கைப்பற்றியிருந்தனர். அதாவது நமது தமிழக மக்களின் இடங்களைப் பறித்துக் கொண்டனர்.
அரசுக்கு சுட்டிக்காட்டினோம்
இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்த்தேசப் பேரியக்கம் மற்றும் தோழமைக் கட்சிகள், அமைப்புகள் எல்லோருமாகச் சேர்ந்து அரசுக்குச் சுட்டிக் காட்டினோம். கவனத்துடன் இதைப் பரிசீலித்த அரசு, தேர்வானோர்களின் சான்றிதழ் சரிபார்ப்பை நிறுத்திவைத்திருப்பதாக அறிவித்து, அந்தத் தகவலை எங்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
சான்றிதழ் சரிபார்ப்புப்பணி நிறுத்தம்
எங்களின் வேண்டுகோளுக்கு அரசு செவிசாய்த்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறோம். மேலும், நாங்கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பதாகவே கருதுகிறோம். தேர்வானோரின் சான்றிதழ் சரிபார்க்கும் பணியை நிறுத்திவைத்திருப்பதானது, பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் வெளிமாநிலத்தவர் யாரும் ரகசியமாகப் புகுந்துவிடாதபடி தடுக்கும் முன்முயற்சி நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.
தமிழகத்தவர்களுக்கு மட்டுமே தேர்வு
அதே நேரம் மேல்நடவடிக்கைகளும் இந்த விவகாரத்தில் தேவைப்படுகிறது. அதாவது, தேர்வானோர் சான்றிதழ் சரிபார்ப்பை நிறுத்தியது வரை போதாது; தேர்வையே ரத்து செய்துவிட்டு, வெளிமாநிலத்தவர்க்கு இடமின்றி, தமிழகத்தவர் மட்டுமே பங்கேற்கும் மறுதேர்வினையே நடத்தக் கோருகிறோம். அதன் மூலம் மண்ணின் மக்களுக்கே வேலைவாய்ப்பு உரிமையை உறுதி செய்யக் கோருகிறோம்.
அரசு சட்டம் இயற்ற வேண்டும்
அரசு வேலைகளைப் பொறுத்தவரை "மண்ணின் மக்களுக்கே" என கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, பிகார், மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களும் சட்டமே இயற்றிவிட்டன. எனவே தமிழ்நாட்டிலும் "மண்ணின் மக்களுக்கே வேலை" என்கிற சட்டத்தை இயற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை உடனடியாகச் செய்யுமாறு அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.