21ம் நூற்றாண்டிலும் இந்தியாவில் பெண்கள் நுகர்வுப் பொருளாகவே பார்க்கப் படுகின்றனர்: வேல்முருகன்
சென்னை: 21ஆம் நூற்றாண்டிலும் கூட இந்தியாவில் பெண்களை ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமே பார்க்கிற போக்கு தொடர் கதையாக இருக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கு அரசியல் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள ‘மகளிர் தின' வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூகத்தில் சரிபாதியான மகளிருக்கு இந்நாளில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊதிய உயர்வு, பணி நேரம், வாக்களிப்பு உரிமை என உரிமைசார்ந்த போராட்டங்களின் அடிப்படையில் உருவானதே மகளிர் தினம். இன்னமும் பெண்கள் தங்களுக்கான உரிமை சார்ந்த போராட்டங்களை தொடர வேண்டிய நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது.
21ஆம் நூற்றாண்டிலும் கூட இந்தியாவில் பெண்களை ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமே பார்க்கிற போக்கு தொடர் கதையாக இருக்கிறது. இந்தியாவில் 20 நிமிடத்துக்கு ஒரு பெண் வல்லுறவுக்குள்ளாக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான ஆய்வுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் பெருகிவரும் மது பழக்கத்தால் வல்லுறவு சம்பவங்கள் அதிகரிக்கிற நிலை இருக்கிறது. பெண்களைப் பாதுகாக்க மது விற்பனை என்பதை அடியோடு தடை செய்ய வேண்டியது அவசியம்.
பெண்களை நம்மில் பாதியாக நமக்கு சரி நிகராக கருதி அவர்கள் அனைத்துத் துறைகளிலும் சுயமரியாதையுடன் முன்னேறிட கரம் கொடுப்பதும் கரம் கோர்ப்பதும் அனைவரது கடமையாகும். நம் வாழ்வுரிமை சார்ந்த போராட்ட களங்களில் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் பங்கேற்கிற நிலைமையை நாம் உருவாக்க வேண்டும் என இன்றைய மகளிர் தின நாளில் உறுதியேற்போம்.
அனைத்து மகளிருக்கும் மீண்டும் என்னுடைய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.