உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு: வேல்முருகன் கடும் கண்டனம்
தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழி ஆகவிடாமல் தடுக்க டெல்லியின் ஆட்சியாளர்கள் யார் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்
சென்னை: டெல்லி ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினர் யாராக இருந்தாலும் தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழி ஆகவிடாமல் தடுக்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்விகேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வேல்முருகன், அரசமைப்புச் சட்டத்தின் 348(2)ஆவது பிரிவு, உயர் நீதிமன்ற ஆட்சி மொழியாக மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்குவதற்கான தீர்மானத்தை 2006 கருணாநிதி கொண்டு வந்ததை சுட்டிக்காட்டிய அவர், டெல்லி இதனை தொடர்ந்து நிராகரித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தின் படி அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர் நீதிமன்றங்களின் வழக்காடு மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தமிழுக்கு மட்டும் ஏன் உச்சநீதிமன்றம் பாராபட்சம் பார்ப்பதாக கேள்வி எழுப்பியுள்ளார். இதில் உச்சநீதிமன்றத்தின் தலையீடு தேவையில்லை என்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தாலே போது என்றும் வேல்முருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்களல்ல தமிழர்கள் என்பதை மோடி அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று, தமிழினத்தின் கருங்காலிகள் சிலர் தமிழுக்கு எதிரானவர்களுக்கு கைக்கூலிகளாய் இருப்பதால்தான் இத்தனை காலமாக தமிழுக்கு அவர்களால் தடை போட முடிகிறது. தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழி ஆகவிடாமல் தடுக்க டெல்லி ஆட்சியாளர்கள் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ள வேல்முருகன், இனியும் இதனைக் கைகட்டி நின்று பார்ப்பவர்கள் தமிழர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.