பெருநிறுவனங்களின் நலனுக்காக மட்டும்தான் மத்திய அரசா?...வேல்முருகன் பாய்ச்சல்
சென்னை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் சாமானிய மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பெருநிறுவனங்களின் நலனுக்காக மட்டும்தான் மத்திய அரசா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் பொதுநிதி நிலை அறிக்கையானது சாதாரண ஏழை எளிய மக்களுக்கானது அல்ல. பொதுவாக பெருநிறுவனங்களுக்கான ஒரு அறிக்கையாகத்தான் இருக்கிறது.
ஏழைகள், விவசாயிகள் நலனுக்கு ஒரு சில அறிவிப்புகளை மட்டுமே மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் நாங்கள் தொடர்ந்து முன்வைத்து வரும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் பெருநிறுவனங்களுக்கான வரியை 5% குறைத்து மோடி அரசு பெருநிறுவனங்களுக்கு மட்டுமேயான அரசு என்பதை வெளிப்படையாக நிரூபித்துள்ளது.
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கும் என்று நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வருமான வரி உச்சவரம்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று அறிவித்திருப்பது நடுத்தர வர்க்கத்தினரை மாத ஊதியதாரர்களை பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
யோகா பயிற்சி நிறுவனங்களை நடத்துகிற இந்துத்துவா சக்திகளுக்கும் வரி விலக்கைக் கொடுத்து தமது உண்மை முகத்தை மோடி அரசு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைக்கு எடுப்பதற்கு பதிலாக சேவை வரியை 14% ஆக அதிகரித்திருப்பதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது இந்த நிதி நிலை அறிக்கை.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்; தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கான முத்ரா வங்கி அமைக்கப்படும் என்பது போன்ற ஓரிரு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. ஆனால் உலக கலாசார பாரம்பரிய சின்னங்களில் தமிழகத்தின் எந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமும் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
மத்திய அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் வளர்ச்சி மற்றும் முதலீடு என்ற சொற்கள் 'தாரக' மந்திரம் போல பல முறை உச்சரிக்கப்பட்ட நிலையில் இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலையை ரூ3 அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது சாமானிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஒருபக்கம் வளர்ச்சி, முதலீடு என்றெல்லாம் பேசிக் கொண்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உருப்படியான நடவடிக்கை எடுக்காமல் சாமானிய மக்கள் மீது மீண்டும் மீண்டும் சுமையேற்றுகிற வகையில் இப்படி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திருப்பது மிகப் பெரிய முரணாக இருக்கிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தனியார் மயமாக்கல், பெருநிறுவனங்களுக்கு லாபம் என்கிற ஒற்றைப் பாதையில் மட்டுமே பயணிக்கிறதே தவிர 'வாக்களித்த மக்களின் வாழ்க்கையில் மாற்றம்-ஏற்றம்" கொண்டுவருவோம் என்ற வாக்குறுதியெல்லாம் ஏமாற்றுவித்தைதான் என்பதையே ரயில்வே நிதி நிலை அறிக்கை, பொதுநிதிநிலை அறிக்கை அனைத்துமே அம்பலப்படுத்தியிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.