தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புழல் சிறையில் வேல்முருகன் உண்ணாவிரதம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புழல் சிறையில் தவாக தலைவர் வேல்முருகன் உண்ணாவிரதம் தொடங்கினார்.
சென்னை : தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் பலியானதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் புழல் சிறையில் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி சென்றார். அங்கு அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடியில் தங்க வைக்கப்பட்டார்.
உடனடியாக தூத்துக்குடி சென்ற விழுப்புரம் போலீஸார், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் அவரை கைது செய்து, திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தியதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து வேல்முருகன், சென்னை புழல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளார். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.